தூத்துக்குடி: ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆக இருந்த தியேட்டரில்.. 70 அடி உயர கட் அவுட்டை அகற்றிய போலீசார்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஜனநாயகன் திரைப்படம் வெளியாகும் தியேட்டர் ஒன்றில் விஜய் ரசிகர்கள் சார்பில் 70 அடி உயர பிரமாண்ட கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் முறையான அனுமதி பெறாமல் இந்த கட் அவுட் வைக்கப்பட்டதாக கூறி அவசர அவசரமாக அந்த கட் அவுட்டை போலீசார் அகற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படம் வெளியாகும் போது கொண்டாட்டங்களுக்கும் பஞ்சம் இருக்காது. கட் அவுட் அடிப்பது, பாலாபிஷேகம் செய்வது என ரசிகர்கள் அன்றைய நாளை திருவிழாவாக மாற்றுவார்கள்.

70 அடி உயரத்தில் கட் அவுட்
எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் என இவர்களது படங்கள் வெளியாகும் போது கொண்டாட்டமாக இருக்கும். இதில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிவிட்டு இனிமேல் நடிக்கப் போவது இல்லை இதுவே என் கடைசி படம் என்று கூறியுள்ள விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வரும் 9 ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் விஜய் ரசிகர்கள் திரைப்படத்தை கொண்டாட தயாராகி வருகின்றனர். அந்த வகையில் தற்போதே பல அடி உயர கட் அவுட்களை தியேட்டர்கள் முன்பு வைக்க தொடங்கிவிட்டனர். அந்த வகையில் தான் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள லட்சுமி தியேட்டரில் விஜய் ரசிகர்கள் 70 அடி உயரத்தில் கட் அவுட் வைத்திருந்தனர்.
அனுமதி பெறாமல் வைத்ததாக
ஜனநாயகன் திரைப்படம் வெளியாவை ஒட்டி விஜய்யின் போஸ்டர் அடங்கிய கட் அவுட்டை 70 அடி உயரத்திற்கு பிரமாண்டமாக வைத்துள்ளனர். சாத்தான்குளத்தில் இருந்து விஜயராமபுரம் செல்லும் சாலையில் வைக்கப்பட்டுள்ள இந்த கட் அவுட்டானது சாலை அருகில் இருப்பதாகவும், அருகில் குடியிருப்பு வீடுகள், கடைகள் இருப்பதாலும் சரிந்து விழுந்தால் பெரிய ஆபத்து ஏற்படும் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும் இங்கு கட் அவுட் வைக்க விஜய் ரசிகர்கள் சார்பில் போலீசிடம் உரிய அனுமதி பெறாமல் இருந்ததும் தெரியவந்தது. மக்கள் அதிகம் கூடும் பகுதி என்பதால் சரிந்து விழுந்தால் மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டு விடும் என கருதி சாத்தான்குளம் தாசில்தார் ராஜேஸ்வரி மற்றும் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்கள்.
அப்புறப்படுத்திய போலீசார்
அப்போது இந்த கட் அவுட் அபாய நிலையிலேயே இருக்கிறது என கூறிய ராஜேஸ்வரி இந்த கட் அவுட்டை உடனே அகற்றுமாறு உத்தரவிட்டார். இதையடுத்து அங்கிருந்த சிறுவர்களை வைத்து ஆபத்தான முறையில் அந்த கட் அவுட்டானது அப்புறப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் எஞ்சிய கட் அவுட்களை அப்புறப்படுத்தினர்.
இதையடுத்து போலீசார் முறையான அனுமதி பெற்று இதுபோன்ற பேனர்களை அமைக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக நிர்வாகிகளுக்கு அறிவுறை வழங்கினர். கட் அவுட் அபாயகரமான இடத்தில் இருந்ததாக கூறி ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆக உள்ள தியேட்டர் அருகில் வைக்கப்பட்ட கட் அவுட்டை அகற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications