ஒரே பெண்ணை காதலிப்பதில் மோதல்.. உறவினர் என்றும் பாராமல்.. 17 வயது சிறுவன் செய்த பகீர் சம்பவம்!
தூத்துக்குடி: கோவில்பட்டியில் காதலுக்கு இடையூறாக இருந்த உறவினரை வெட்டி கொலை செய்த 17 வயது சிறுவன் கைது செய்யயப்பட்டார். விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி ஸ்டாலின் காலனி பகுதியைச் சேர்ந்த பொய்யாழி மகன் மதன்குமார் (22). இவர் கோவில்பட்டி மந்திதோப்பு பாண்டவர்மங்கலம் குளத்துகரை அருகே கடந்த 29-ம் தேதி கழுத்தில் வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். இந்த தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.

தனிப்படை அமைப்பு
கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி, நாலாட்டின்புதூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பத்மாவதி ஆகியோர் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் குருசந்திர வடிவேல், துரைச்சாமி மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இதன்பின்னர் வழக்கை தீவிரமாக கையில் எடுத்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்த ஆரம்பித்தனர்.

திடுக்கிடும் தகவல்கள்
அப்போது கோவில்பட்டி அருகே உள்ள தீத்தாம்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவர் மதன்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் அந்த சிறுவனை கைது செய்தனர். இதனை தொடர்ந்து சிறுவனிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. கொலை செய்யப்பட்ட மதன்குமாரும், சிறுவனும் நெருங்கிய நண்பர் ஆவார்கள். அவர்கள் இருவரும் ஒரே பெண்ணை காதலிப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

மது அருந்தியுள்ளனர்
இதனால் சிறுவன் தன்னுடைய காதலுக்கு மதன்குமார் இடையூறாக இருப்பதாக கருதி மதன்குமாரை தீர்த்துக்கட்டிவிடலாம் என்று திட்டமிட்டார். இதனால் காட்டுப்பகுதியில் அரிவாளை மறைத்து வைத்துவிட்டு, மதன்குமாரை மது அருந்துவதற்கு அங்கு வரச் சொல்லியிருக்கிறார். மதன்குமார் ஒரு பைக்கிலும், சிறுவன் ஒரு பைக்கிலும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு இருவரும் மது அருந்தியுள்ளனர்.

அரிவாளை குளத்தில் போட்டார்
அப்போது சிறுவன் அப்பகுதியில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, மது அருந்திக் கொண்டு இருந்த மதன்குமாரை கழுத்தில் வெட்டி கொலை செய்துள்ளார். பின் அந்த அரிவாளை அருகிலுள்ள குளத்தில் போட்டுள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுவனை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் குளத்திலிருந்து அரிவாளை கைப்பற்றினர். அவன் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் துரிதமாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை கண்டு பிடித்து, அவரைக் கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.












Click it and Unblock the Notifications