வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக Ex அமைச்சர் மகன்! தூள் பறக்கும் தூத்துக்குடி அரசியல்!
தூத்துக்குடி: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தனது மகனை தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் களமிறக்கியுள்ளார்.
அதிமுக அதிக இடங்களை கைப்பற்றும்பட்சத்தில் மகனை தூத்துக்குடி மேயராக்க மாஜி அமைச்சர் திட்டமிட்டுள்ளாராம்.
இதனிடையே திமுக தரப்பில் 59-வது வார்டு கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், இப்போதே தனது மகனின் வெற்றி உறுதி என நம்புகிறாராம் சண்முகநாதன்.

முன்னாள் அமைச்சர்
முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன், தனது மகனும் தொழிலதிபருமான எஸ்.பி.எஸ்.ராஜாவை தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் 59-வது வார்டில் களமிறக்கியிருக்கிறார். பல ஆண்டுகளாக தூத்துக்குடி மாகராட்சி பெண்கள் ஒதுக்கீட்டில் இருந்த வந்த நிலையில், இப்போது பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் உட்கட்சி பனிப்போர் காரணமாக திமுக ஒரு வேளை குறைந்த இடங்களில் வெற்றிபெற்றால் மகனை மேயராக்கி அழகு பார்ப்பது என தீர்மானித்துவிட்டார் அதிமுக மாஜி அமைச்சர் சண்முகநாதன்.

59-வது வார்டு
தூத்துக்குடி மாநகராட்சியின் 59-வது வார்டில் ஸ்பிக் நகர், ஹார்பர் கன்ஸ்ட்ரக்ஷன் சாலை, திருச்செந்தூர் பிரதான சாலை, சண்முகபுரம், சூசை நகர் உள்ளிட்ட பகுதிகள் வருகின்றன. இப்பகுதிகளில் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கி மகனின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்து வைத்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன். இதுமட்டுமல்லாமல் சண்முகநாதனின் தாராளம் கட்சியினரை அங்கு பம்பரமாக சுழல வைத்துள்ளது.

இரண்டு அமைச்சர்கள்
தூத்துக்குடி மாவட்டத்திற்கு அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் என இரண்டு அமைச்சர்கள் உள்ள நிலையில் அதிமுகவுக்கு கடுமையான போட்டியை கொடுத்து வருகிறது திமுக. மேலும், கனிமொழி எம்.பி.யின் தொகுதி என்பதால் தூத்துக்குடியில் திமுக வெற்றிபெறப் போகும் மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

முதல்முறை
அதிமுக சார்பில் 59-வது வார்டில் போட்டியிடும் எஸ்.பி.எஸ்.ராஜா, முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். அப்பா அமைச்சர், மாவட்டச் செயலாளர் என பல பொறுப்புகளில் இருந்திருந்தாலும் ராஜாவுக்கு தேர்தல் களம் என்பது புதிதான ஒன்றாகும்.












Click it and Unblock the Notifications