தூத்துக்குடி மீன் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிவு! 21 பெண்கள் மயக்கம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மீன் பதன ஆலையில் அமோனியா கேஸ் கசிவால் 21 பெண்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் பகுதியில் தனியார் மீன்பதப்படுத்தும் ஆலை உள்ளது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் மீன்கள் பதப்படுத்தப்பட்டு பிறகு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதி, வெளிமாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணிக்கு இந்த ஆலையில் மின் விபத்து ஏற்பட்டது.
அமோனியா கேஸ் சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டது. இதையடுத்து நிறுவனம் முழுவதும் அமோனியா வாயு பரவியது. இதனால் அங்கு பணியில் இருந்த கும்பகோணம் பகுதியை சேர்ந்த 5 பெண்கள், ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த 16 பெண்கள் என மொத்தம் 21 பெண்களுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு கண் எரிச்சலை கொடுத்தது.
பின்னர் அவர்கள் ஒவ்வொருவராக மயங்கி விழுந்தனர். இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 21 பெண்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக புதியம்புத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதே போல் கடந்த 2014 ஆம் ஆண்டும் தூத்துக்குடியில் உள்ள கடல் வாழ் உயிரினங்களை பதப்படுத்தும் ஆலையில் வாயு கசிவு ஏற்பட்டு 54 பேர் மயங்கி விழுந்து தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications