பொம்மை சிஎம் விஜய்.. ’லாட்டரி’ ஆதவ் தான் ஆக்டிங் முதல்வர்! ரவுண்டு கட்டி அடித்த அனிதா ராதாகிருஷ்ணன்!
தூத்துக்குடி: தூத்துக்குடி அமலாக்கத்துறை என்னை ஒன்றும் நெருக்கவில்லை, தமிழக வெற்றி கழக அரசை லாட்டரி மார்ட்டின் கும்பல் தான் வழி நடத்துகிறது என கூறியுள்ளார் திமுக முன்னாள் அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன். மேலும், முதல்வராக ஆதவ் அர்ஜுனா செயல்படுகிறார் எனவும், தமிழக முதல்வர் விஜய் பொம்மை முதல்வராக உள்ளார் எனவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடியில் திமுக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," இந்த அரசு எந்த மாயையில் உருவானதோ, அதே போன்று சமூக வலைதளங்கள் மூலம் திமுக அரசின் சாதனைகளை எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம்.

இந்த ஆட்சியில் கோவையில் என்ன நடந்தது? சென்னையில் என்ன நடந்தது ?தமிழக முழுவதும் லாட்டரி சீட்டு விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. எல்லா இடத்திலும் கஞ்சா விற்கும் நிலை இந்த அரசாங்கத்திற்கு தெரியுமா? தமிழக முதலமைச்சர் தூங்கிக்கொண்டு இருக்கிறாரா?
அனிதா ராதாகிருஷ்ணன்
இன்றைக்கு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழக வெற்றி கழகம் அதன் தலைவரை விட்டுவிட்டு லாட்டரி சீட்டு கும்பலாக இருக்கிற ஆதவ் அர்ஜுனா தான் அந்த கட்சியை கைப்பற்ற போகிறாரா? என அந்த கட்சிக்காரர்களே பேசிக் கொள்கிறார்கள். இந்தக் கட்சிக்காரர்கள் உஷாராக இருக்க வேண்டும். லாட்டரி சீட்டு மூலம் கிடைத்த பணத்தை இங்கே தமிழகத்தில் ஊடுருவ விட்டுவிட்டு, தமிழகத்திலே பொம்மையாக ஒருவரை உட்கார வைத்துவிட்டு ஆட்சி நடத்தலாம் என்று கனவு காண்கிறார்கள். தமிழகத்தை யார் ஆள வேண்டும் என்று கட்சித் தொண்டர்கள் வாக்களித்தார்களோ? அந்த நிலையை அந்த கட்சி தொண்டர்கள் உருவாக்க வேண்டும்.
முதலமைச்சர் விஜய்
இன்றைக்கு தமிழக முதலமைச்சர் விஜய் வருகின்றார் போகின்றார். ஆனால் அறிக்கைகள் யார் மூலம் வருகிறது என்றால் ஆதவ் அர்ஜுனா என்ற லாட்டரி கும்பல் மார்ட்டின். இன்றைக்கு தன்னுடைய பணத்தை எல்லாம் தமிழகத்தில் இறைத்திருக்கிறாரா? என்று மக்கள் கேட்கின்ற வகையில் நடைபெற்று வருகின்றது. சீக்கிரத்தில் தமிழகத்தில் லாட்டரி விற்பனையும் வந்து விடுமோ? என்ற அச்சம் எங்களுக்கும் தமிழக மக்களுக்கும் இருக்கின்றது
விஜய் அரசு
இந்த ஆட்சியில் கொலை கொள்ளை கற்பழிப்பு அனைத்தும் நடக்கிறது என்றால் இந்த அரசு தூங்கிக் கொண்டிருக்கிறதா? என்று மக்கள் கேட்கிறார்கள். இன்றைக்கு இருக்கிற ஆட்சி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 2500 தருவேன் என்றார்கள் தரவில்லை ஆயிரம் ரூபாயும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறிய பின் தான் கொடுத்தார்கள். மீனவர்களுக்கு 20000 கொடுப்பேன் என்றார்கள். கொடுப்பார்களா? மேலும் தாய்மாமன் சீர் வழங்குவேன்.. பட்டுச்சேலை வழங்குவேன். என்று எல்லாம் கூறினார்கள். தமிழக முழுவதும் பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் என்றார்கள். எப்படி எல்லாம் ஏமாற்றி இருக்கிறார்கள். இதற்கெல்லாம் சட்டமன்றத்தில் எங்களிடம் பதில் சொல்ல வேண்டும்.
அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை விசாரணை என்றால். அதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். என்னுடைய வழக்கை பொறுத்தவரை நீதிமன்றத்தில் உள்ளது. அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒன்றும் வலியுறுத்தவில்லை அமலாக்கத்துறை என்னை ஒன்றும் நெருக்கவில்லை. தமிழக வெற்றிக்கழக அரசியல் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்தது ரொம்ப சந்தோசம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications