சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகள் தினமும் அழியும்படி செட்டிங்.. மாஜிஸ்திரேட் பரபர
கோவில்பட்டி: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகள் தினமும் தானாக அழியும் படி செட்டிங் செய்யப்பட்டுள்ளதாக மாஜிஸ்திரேட் பாரதிதாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மர்ம மரணம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து விசாரணை நடத்தியது. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நேரில் சென்று கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் 28-ஆம் தேதி விசாரணை நடத்தினார்.
அப்போது அவர் அங்கு நடந்தது என்ன என்பது குறித்து அறிக்கையாக உயர்நீதிமன்ற பதிவாளருக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
ஜெயராஜ், பென்னிக்ஸை விடிய விடிய லத்தியால் தாக்கினர்- மாஜிஸ்திரேட் பாரதிதாசன் பரபரப்பு அறிக்கை
கண்காணிப்பு கேமரா
அந்த அறிக்கையில் சாத்தான்குளம் சம்பவத்தின் நேரடி சாட்சியான காவல் நிலைய கண்காணிப்பு கேமராவில் சம்பந்தப்பட்ட பதிவுகளை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி, பதிவிறக்கம் செய்யும் பொருட்டு, மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து உதவி சிஸ்டம் ஆபிஸர் வரவழைக்கப்பட்டார்.
உத்தரவு
மேலும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் சாத்தான்குளம் வட்டாட்சியர் உள்ளூர் புகைப்பட நிபுணர்களையும் சிசிடிவி கேமரா பதிவிறக்க உள்ளூர் நிபுணர்களையும் ஏற்பாடு செய்யப்பட்டு சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு வந்தனர். அப்போது சிசிடிவியின் ஹார்ட் டிஸ்க், உதவி சிஸ்டம் அதிகாரி முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டன.
செட்டிங்ஸ்
அதில் போதுமான ஸ்டோரேஸ் 1 டெரா பைட் இருந்த போதிலும் தினப்படி தானாகவே அழிந்து போகும் அளவிற்கு செட்டிங்ஸ் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் சம்பவ நாளாக 19-ஆம் தேதி முதலாக எவ்வித காணொலி பதிவுகளும் கணினியில் இல்லை. அவை அழிக்கப்பட்ட நிலையில் இருந்தன. முக்கிய நேரடி சாட்சியான அதன் தரவுகளை பதிவிறக்கம் செய்யும் பொருட்டு அது என்னால் கைப்பற்றப்பட்டு பாதுகாப்பில் வைக்கப்பட்டது.
500 ஜிபி
மேலும் அதன் தொடர்ச்சியாக காவல் நிலைய பதிவுகள் தொடர்ந்து சரிபார்க்கும் பொருட்டு சாத்தான்குளம் வட்டாட்சியர் அவர்களை புதிதாக ஹார்ட் டிஸ்க் 500 ஜிபி உடனடியாக கொண்டு வரப்பட்டு அனைவரின் முன்னிலையிலும் பொருத்தப்பட்டு தொடர்ந்து இயக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டு ஆய்வாளர் பொறுப்பு அவர்களிடம் தகவல் அளிக்கப்பட்டது. இவை அனைத்தும் காணொலியாக பதிவு செய்யப்பட்டது என்றார் பாரதிதாசன்.