'முதல் இரண்டு அலையை போல.. கொரோனா 3ஆம் அலையையும் சிறப்பாக எதிர்கொள்ள தயார்..' நிர்மலா சீதாராமன் பளிச்
தூத்துக்குடி: கொரோனா காலகட்டத்தில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கை காரணமாகவே இப்போது தொழில்கள் அனைத்தும் நடைபெற்று வருவதாகத் தெரிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா முதல் இரண்டு அலையையும் திறம்பட எதிர்கொண்ட மத்திய அரசு மூன்றாவது அலை வந்தாலும் அதை சிறப்பாக எதிர்கொள்ளும் எனத் தெரிவித்தார்
தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அப்போது தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் கொண்டாடும் வகையில் பிரத்தியேக தபால்தலை மற்றும் பிரத்தியேக அஞ்சல் அட்டையையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். மேலும், நடமாடும் ஏ.டி.எம். வாகனம் மற்றும் தடுப்பூசி வாகன சேவையையும் அவர் தொடங்கி வைத்தார்.

நிர்மலா சீதாராமன் பேச்சு
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், "வங்கித் துறையில் ஒவ்வொரு நாளும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பொதுத்துறை வங்கிகளில் கடந்த 2018ஆம் ஆண்டு வரை பல்வேறு விதமான பிரச்சனைகள் இருந்தன. பல இடங்களில் கடன்கள் திரும்பி வராத சூழ்நிலை இருந்தன. இதன் காரணமாக நிதித் துறையின் வளர்ச்சி என்பது மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கடந்த 2014ஆம் ஆண்டு முதலே இந்த பிரச்சனைகளை எல்லாம் சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டன. இதன் காரணமாகவே தற்போது பொதுத்துறை வங்கிகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன.

ஜன் தன் யோஜனா திட்டம்
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் வங்கித் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தூத்துக்குடியில் இருந்து கொண்டே பல கிராமங்களுக்கு வங்கி சேவையைக் கொடுக்க முடியும் என்ற அளவிற்குத் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் வங்கிச்சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே மினிமம் வைப்புத் தொகை இல்லாமல் அனைவரும் வங்கிக் கணக்கு தொடங்கும் 'ஜன் தன் யோஜனா' என்ற திட்டத்தைப் பிரதமர் மோடி கொண்டு வந்தார்.

வங்கிக் கணக்கு என்பது உரிமை
இந்த கணக்கு தொடங்கப்பட்டது மூலமாகவே இன்றைக்குச் சிறு வணிக கடன், முத்ரா வங்கி கடன் எனப் பலவித கடன்களைச் சிறு சிறு வணிகர்களும் பெற முடிகிறது. இதன் காரணமாகவே கொரோனா ஊரடங்கு போன்ற தடைகளையும் தாண்டியும் சிறு வணிகர்களால் தொடர்ந்து தொழில் செய்ய முடிகிறது. வங்கிக் கணக்கு என்பது ஒவ்வொரு மனிதனுடைய உரிமை. அது அனைவருக்கும் முக்கியமான ஒன்று.

அரசு எடுத்த நடவடிக்கை
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தனது வங்கி சேவையில் 74% அரசு நிர்ணயித்த முக்கிய துறைகளுக்குக் கடன் கொடுத்துள்ளது. அரசு மூலம் நிர்ணயிக்கப்பட்ட தொழில்கள் அனைத்தும் வளரும். கொரோனா ஊரடங்கு சமயங்களில் கூட எந்தவித கூடுதல் பிணையும் இல்லாமல் கடனுதவி கொடுக்க அரசு உதவியது. அதன் காரணமாக தற்போது தொழில்கள் அனைத்துமே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தனியார் வங்கிகள் அரசு அறிவிக்கக் கூடிய நல்ல திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்லவேண்டும்.

3ஆம் அலையை எதிர்கொள்ளத் தயார்
நாட்டில் தற்போது 73 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா முதல் இரண்டு அலையையும் திறம்பட எதிர்கொண்ட மத்திய அரசு மூன்றாவது அலை வந்தாலும் அதனை எதிர்கொள்ளும். இதற்காக நகரங்கள் முதல் கிராமங்கள் வரை அனைத்து பகுதிகளிலும் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதிகளை ஏற்படுத்த நிதியுதவியை மத்திய அரசு வழங்கியுள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications