ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க உத்தரவிட முடியாது.. உச்சநீதிமன்றம் அதிரடி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க, உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
பொது மக்களின் போராட்டத்தை தொடர்ந்து கடந்த வருடம் மே மாதம் 28ஆம் தேதி, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை சீல் வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
தருண் அகர்வால் குழு, தூத்துக்குடியில் ஆய்வு நடத்தி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படவில்லை என்று அறிக்கையளித்தது. இதையடுத்து ஸ்டெர்லைட் தொழிற்சாலையை, மூன்று வாரங்களுக்குள் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், வேதாந்தா நிர்வாகத்திற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பசுமைத் தீர்ப்பாயம் கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றத்தில், அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.
இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க உத்தரவிட முடியாது என்று, கூறிய உச்சநீதிமன்றம் வரும் 29ம் தேதிக்கு, வழக்கை ஒத்தி வைத்தது. ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின்சாரம் வழங்குவது தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று வழக்கறிஞர்கள் பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தனர்.