"மூதேவியை" செருப்பால் அடித்த மக்கள்.. நெஞ்சில் அடித்து கதறிய கலைஞர்கள்.. தூத்துக்குடியில் என்னாச்சு?
மழை வேண்டி தூத்துக்குடி அருகே கிராம மக்கள் விநோத வழிபாடு செய்தனர்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே, மூதேவியை நடுஊரில் வைத்து செருப்பாலும், துடைப்பத்தாலும் அடித்து, எரித்த விநோத சம்பவம் நடந்துள்ளது.
ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, கயத்தாறு, எட்டயபுரம் மற்றும் விளாத்திகுளம் ஆகிய தாலுக்காக்களில் சுமார் 1,70,000 ஹெக்டர் பரப்பளவிலான மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்படுகிறது..
இதில் உளுந்து, கம்பு, பாசி, வரகு, கேழ்வரகு, மக்காச்சோளம், பருத்தி மற்றும் மிளகாய் போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.. எனவே, இந்த பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது..
காலை தூக்கி கண்ட்றாவி டான்ஸ்.. தூத்துக்குடி பேரை கெடுத்த 2கே கிட்ஸ்..
கழுதைகள்
ஆனால், இந்த ஆண்டு சரியாக மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.. இதனால், விநோத வழிபாடு ஒன்றை நடத்தினர்.. பொதுவாக, மழைக்காலங்களில் பருவமழை பொய்க்கும் சமயங்களில், மழை பெய்ய வேண்டி, இதுபோன்ற வழிபாடுகளையும், பல்வேறு சடங்குகளையும் விவசாயிகள் நடத்துவது வழக்கம்.. குறிப்பாக மழை செம்பு எடுத்தல், மழைக்கஞ்சி காய்ச்சுதல், கொடும்பாவி கட்டி எரித்தல், ஒப்பாரி வைத்தல், கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தல் போன்ற சடங்குகள் நடைபெறும்.
மூதேவி ஒப்பாரி
இந்த சடங்குகளை செய்து வைத்தால், அந்த ஊரில் உள்ள துஷ்டசக்திகள் நீங்கிவிடும், வருணபகவான் மனம் இரங்கி மழை பொழிய வைப்பார் என்று காலம்காலமாகவே நம்பப்பட்டு வருகிறது.. அந்தவகையில், ஸ்ரீவைகுண்டம் அருகே செக்காரக்குடி கிராமத்தில், கடந்த வாரம் கிராமத்தின் சார்பில் ஊர்க்கூட்டம் போடப்பட்டது.. அப்போது, மழை பெய்ய வேண்டி கொடும்பாவி கட்டி எரிக்கும் நிகழ்ச்சி நடத்தவும் ஊர்ஜனம் முடிவு செய்தனர்.
சாவு மேளம்
மழை பெய்ய வேண்டி கொடும்பாவி கட்டி எரிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மனித உருவத்தை வைக்கோல் மற்றும் செடிகளால் செய்து, அதற்கு சட்டை அணிவித்தனர். பின்னர், பாடை கட்டி, அதை பருவமழைக்கு தடையாக இருக்கும் கொடும்பாவி எனும் மூதேவியாக பாவித்து, சாவு மேள தாளம், குறத்தி ஆட்டம் போன்றவைகளை நடத்தினார்கள்.. ஊருக்கு நடுவில், அந்த மனித உருவத்தை பார்த்து, கரகாட்ட கலைஞர்கள் ஒப்பாரி பாடல்களை பாடி, நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதார்கள்.. பிறகு, அந்த கொடும்பாவி உருவத்தை கயிறால் கட்டி, ஊரிலுள்ள தெருக்கள் வழியாக இழுத்து சென்றனர்.
மூதேவி
வழியெல்லாம் ஒவ்வொரு வீட்டு முன்பு நின்றவர்கள் செருப்பாலும், துடைப்பத்தாலும் அதை அடித்தார்கள்.. இறுதியில் ஊரின் வெளிப்பகுதியில் உள்ள சுடுக்காட்டில் கொண்டு இந்த கொடும்பாவி எரிக்கப்பட்டது.. இப்படி சடங்கை நடத்தியுள்ள நிலையில், அடுத்த 2 நாளிலேயே மழை பெய்துவிடும் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் அந்த கிராம மக்கள். இதனிடையே, இன்று முதல் வரும் டிசம்பர் 1ம் தேதி வரை தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.