மாலத்தீவில் இருந்து மேலும் 198 இந்தியர்கள் கடற்படை கப்பல் மூலம் தூத்துக்குடி வருகை
தூத்துக்குடி: மாலத்தீவில் இருந்து இந்திய கடற்படை கப்பல் ஐ.என்.எஸ். ஐராவத் மூலம் 198 இந்தியர்கள் இன்று காலை தூத்துக்குடி அழைத்து வரப்பட்டனர்.
Recommended Video
கொரோனா லாக்டவுனால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர வந்தே பாரத் மிஷன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வெளிநாடுகளுக்கு சிறப்பு விமானங்களை இயக்கி அங்கு தவிக்கும் இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.
இதேபோல் சமுத்திர சேது ஆபரேஷன் மூலம் மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளில் இருந்து கடற்படை கப்பல் மூலம் இந்தியர்கள் அழைத்துவரப்படுகின்றனர். இதனடிப்படையில் ஏற்கனவே மாலத்தீவில் இருந்து இந்தியர்கள் தூத்துக்குடி துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மேலும் 198 இந்தியர்கள் ஐ.என்.எஸ். ஐராவத் கடற்படை கப்பல் மூலம் இன்று காலை தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களில் 195 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். எஞ்சிய 3 பேரும் புதுச்சேரியை சேர்ந்தவர்கள்.
இவர்கள் அனைவருக்குமே முதல் கட்ட கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து குடியுரிமை சோதனை நடத்தப்பட்டு சொந்த ஊர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலமாகவே அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
இதனிடையே சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மதுரையில் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்படுவதால் சென்னையில் இருந்து இயக்கப்படும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல் திருச்சி மற்றும் தூத்துக்குடி செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.