இப்படியெல்லாம் செய்யக் கூடாது.. படாரென காலில் விழுந்த மாணவி.. சட்டென தடுத்த எம்பி கனிமொழி
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தகத் திருவிழாவில் பரிசு பெற்ற மாணவி திமுக எம்பி கனிமொழியின் காலில் விழுந்து ஆசி பெற்ற போது இப்படியெல்லாம் செய்ய கூடாது என அறிவுறுத்தினார்.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் 3ஆவது புத்தக திருவிழா சென்ற 22-ஆம் தேதி முதல் 29-ஆம் வரை தூத்துக்குடியில் ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவின் நிறைவு விழாவில் கடந்த 29 ஆம் தேதி நடந்தது.
இந்த விழாவில் தூத்துக்குடி எம்பி கனிமொழி கலந்து கொண்டார். அப்போது அவர் பள்ளி மாணவர்களின் கலைத்திறன்களை ஊக்குவிக்கும் விதமாக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசுகளை வழங்கினர்.
இந்தாங்க குடை.. ஏன் மழையில் நனைகிறீர்கள்.. கனிமொழி காட்டிய கனிவு! சண்முகையா எம்.எல்.ஏ.காட்டிய பணிவு!
புத்தகத் திருவிழா
இந்தப் புத்தகத் திருவிழாவில் கோவில்பட்டி கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி விஷாலிக்கு பதக்கத்தை அணிவித்த கனிமொழி, ஆட்சியர் செந்தில்ராஜிடம் நிகழ்ச்சி குறித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது சட்டென எதிர்பாராத விதமாக விஷாலி கனிமொழி எம்பியின் காலில் விழுந்தார். இதனால் பதறிய கனிமொழி, இப்படியெல்லாம் செய்யக் கூடாது என அறிவுறுத்தினார்.
கனிமொழிக்கு பாராட்டுகள்
பின்னர் மாணவியை தோளோடு அணைத்த கனிமொழி பாராட்டுகளை தெரிவித்ததுடன் யார் காலிலும் விழக் கூடாது என சுயமரியாதை குறித்த புரிதலை விளக்கினார். அந்த மாணவியும் தலை அசைத்துவிட்டு சென்றார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது முதல் முறையல்ல, பல முறை குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் காலில் விழும் பழக்கத்தை கைவிடுமாறு கூறியுள்ளார்.
திமுக பொதுக் குழு கூட்டம்
கடந்த அக்டோபர் மாதம் திமுக பொதுக் குழு கூட்டத்தில் கனிமொழி எம்பி திமுக துணை பொதுச் செயலாளர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். இதையொட்டி கனிமொழிக்கு டிவிட்டரிலும் பேஸ்புக்கிலும் போனிலும் வாழ்த்துகள் குவிந்தன. திமுக பெண் நிர்வாகிகள் பலர் கனிமொழியின் வீட்டுக்கும் அவருடைய அலுவலகத்திற்கும் படை எடுத்தனர்.
பெண் குழந்தை
அப்போது பெண் நிர்வாகி ஒருவர் தனது பெண் குழந்தையுடன் கனிமொழியை பார்த்து வாழ்த்து சொல்ல வந்திருந்தார். அப்போது கனிமொழி எதிர்பாராத நேரம் அவருடைய காலில் அந்த குழந்தை விழுந்து வணங்கியது. உடனே கனிமொழி அந்த பெண் நிர்வாகியிடம் கோபமடைந்தார். என்னம்மா இது குழந்தையை காலில் விழ வைக்கிறீங்க, இது ரொம்ப தப்பு என கண்டித்தார்.
கனிமொழி அறிவுரை
பின்னர் கோப முகத்தை சிரிப்பாக மாற்றிய கனிமொழி, அந்த சிறுமியிடம் இப்படியெல்லாம் யார் காலிலும் விழக் கூடாது சரியா!, இந்த பழக்கம் எல்லாம் இருக்கவே கூடாது என அன்புடன் கூறினார். அந்த குழந்தையும் சிரித்துக் கொண்டே தலையாட்டியது. இப்படியாக குழந்தைகள், பெரியவர்கள் என கனிமொழி பெரியாரின் கொள்கையான சுயமரியாதையை கற்பித்து வருகிறார்.
தூத்துக்குடி எம்பி தொகுதி
தூத்துக்குடி எம்பியான கனிமொழி, தேர்தலில் வென்றது முதல் பெரும்பாலான நாட்களை தூத்துக்குடியிலேயே கழிக்கிறார். சென்னைக்கு ஏதேனும் விஷயம் இருந்தால் மட்டுமே வருகிறார். மற்றபடி தூத்துக்குடி தொகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார். தூத்துக்குடி தனது தொகுதிக்குள்பட்ட இடங்கள், அதன் பிரச்சினைகள் எல்லாமே கனிமொழிக்கு அத்துபடி. பெரும்பாலான பிரச்சினைகளை தமிழக அரசின் பார்வைக்கும் மத்திய அரசின் பார்வைக்கும் கொண்டு செல்கிறார். சில பிரச்சினைகளை தனது தொகுதி மேம்பாட்டு நிதியை கொண்டு சரி செய்கிறார். இதனால் அந்த தொகுதியில் கனிமொழிக்கு மக்கள் மனதில் நற்பெயரே உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.