யாரும் எதிர்பாராதது நடக்கும்.. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு “டபுள் டிஜிட்”: அடித்துச் சொன்ன எல்.முருகன்!
தூத்துக்குடி: தமிழகத்தில் பாஜக யாரும் எதிர்பாராத வகையில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் இன்று மாலையுடன் முடிவுக்கு வருகிறது. வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் மேற்கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "400-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெற்று பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்பார். தமிழகத்தில் பாஜக யாரும் எதிர்பாராத வகையில் வரலாற்று திருப்புமுனையாக இரட்டை இலக்க எண்ணிக்கையில் வெற்றி பெறும். பிரதமர் மோடிக்கு மிகப்பெரிய ஆதரவு அலை வீசுகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி இமயமலை சென்று தியானம் செய்தார். தற்போது தமிழகத்தில் விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் செய்து கொண்டிருக்கிறார்." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "2014ல் நாம் பொருளாதாரத்தில் பத்தாவது இடத்தில் இருந்தோம். இப்போது 10 ஆண்டுகளில் பொருளாதாரம் அதிக அளவு முன்னேறியுள்ளது. இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்தியா உலக அளவில் பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளது. தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளோம். 2027 ஆம் ஆண்டுக்குள் மூன்றாவது இடத்தை அடைவோம் என பிரதமர் மோடி மக்களுக்கு கியாரண்டி கொடுத்துள்ளார். நிச்சயம் அதை அடைந்தே தீருவோம்" என்றார்.
மேலும் பேசிய எல்.முருகன், "கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் கழிவுநீர் ஓடையை சுத்திகரிப்பது குறித்து காங்கிரஸ் கவுன்சிலரிடம் கேள்வி எழுப்பிய இளைஞரை காங்கிரஸ் கவுன்சிலர் தாக்கியுள்ளார். காங்கிரஸ் கவுன்சிலரால் தாக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் இருக்கிறார். அந்த கவுன்சிலர் இதுவரை கைது செய்யப்படவில்லை.
அதற்கு மாறாக அந்த இளைஞர் மற்றும் அவரது தாய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சமூக வலைதளங்களில் ஏதாவது வெளியிட்டால் அதிகாலை 2 மணிக்கு கைது செய்யும் காவல்துறை, இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை இன்னும் கைது செய்யாததைப் பார்க்கும் போது ஸ்டாலின் முதல்வராக இருக்கிறாரா? இல்லையா? என்று சந்தேகமாக உள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications