கோவில்பட்டி டு எட்டயபுரம்.. 12 கி.மீ.. ‘ஓட்டமாக ஓடி’ திடீர் ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தூத்துக்குடி : கோவில்பட்டியில் இருந்து எட்டயபுரத்திற்கு 12 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைந்துள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் புதிதாக ரூ.10.5 கோடி மதிப்பீட்டிலான மகப்பேறு பிரிவு கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோவில்பட்டிக்கு நேற்று வருகை புரிந்திருந்த நிலையில் இன்று கோவில்பட்டியில் இருந்து நடைபயிற்சி மேற்கொண்டபடியே 12 கி.மீ சென்று எட்டயபுரத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்களுக்கு உடல்நலம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். தானே முன் உதாரணமாக இருக்கும் வகையில் நூற்றுக்கணக்கான மாரத்தான் ஓட்டப்பந்தயங்களிலும் கலந்து கொண்டுள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

பணியாளர்கள் ஆச்சர்யம்
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வந்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை அங்கிருந்து 12 கி.மீ நடைபயிற்சியாகச் சென்று எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்துள்ளார். வெளியூர்களுக்குச் சென்றாலும், நடைபயிற்சி செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஓட்டமாக ஓடியே வந்து திடீர் ஆய்வில் ஈடுபட்டது மருத்துவமனை பணியாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின்
நெல்லையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் புதிதாக ரூ.10.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு பிரிவு கட்டிடத்தை திறந்து வைத்தார்.

12 கி.மீ நடந்து
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரயிலில் கோவில்பட்டிக்கு நேற்று வந்தார். இன்று காலையில் கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்குளம் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், 12 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் திடீர் ஆய்வு
அப்போது மருத்துவமனையில் உள்ள வசதிகள், மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். இந்த ஆய்வின்போது சில பணியிடங்களுக்கு பணியாளர்கள் இல்லாமல் இருப்பது தெரியவந்தது என்றும், அதனை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவமனை வருகை பதிவேட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications