கிளைச்செயலாளர் முதல் அமைச்சர் வரை ஸ்ரீவைகுண்டம் அதிமுக வேட்பாளர் எஸ்.பி சண்முகநாதன் பயோடேட்டா
ஸ்ரீ வைகுண்டம் தொகுதியின் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் சிட்டிங் எம்எல்ஏ சண்முகநாதன். 2001ஆம் ஆண்டு முதல் இந்த தொகுதியில் போட்டியிடும் சண்முகநாதன் 5வது முறையாக இந்த தொகுதியில் களமிறங்குகிறார்.
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் சட்டசபைத் தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏவாக இருப்பவர் எஸ்.பி.சண்முகநாதன். நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் மீண்டும் வேட்பாளராக களமிறங்குகிறார். கிளைச்செயலாளராக அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்து மாவட்டச் செயலாளராகவும் கைத்தறித்துறை, இந்துசமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை, பால்வளத்துறை ஆகிய துறைகளில் முன்னாள் அமைச்சராகவும் பதவி வகித்தவர். இவர் கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.
பாரம்பரிய வைத்தியர் குடும்பத்தை சேர்ந்தவர் எஸ்.பி.சண்முகநாதன், வயது 66. ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட பண்டாரவிளை தான் இவரது சொந்த கிராமம். 1975ல் அதிமுக உறுப்பினராக சேர்ந்தார். அரசியலில் காலடி எடுத்து வைக்கும் முன்பு, 9வது வகுப்பு படித்து விட்டு தந்தை செய்து வந்த பாரம்பரிய வைத்தியர் தொழிலை தான் சண்முகநாதனும் செய்து வந்தார்.
எம்ஜிஆரால் 1977ல் பண்டாரவிளை கிளை செயலாளராக நியமிக்கப்பட்டார். 1986ஆம் ஆண்டில் பெருங்குளம் பேரூராட்சி தலைவரானார். 1995, 99ஆம் ஆண்டுகளில் ஸ்ரீவைகுண்டம் அதிமுக ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்டார். 2000 ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்டார்.
2001ஆம் ஆண்டில் சட்டசபை தேர்தலின் போது ஸ்ரீவைகுண்டம் சட்டசபை தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு விண்ணப்பித்தார். வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனவுடன் அரசு போக்குவரத்து கழக பஸ்சில் ஏறி சென்னைக்கு சென்றவருக்கு அமைச்சர் பதவியும் கிடைத்தது.
கைத்தறி துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால் 9 மாதங்களிலேயே அமைச்சர் பதவியையும், மாவட்ட செயலாளர் பதவியையும் இழந்தார். இவரது இடத்தை பிடித்த அனிதா ராதாகிருஷ்ணன் அமைச்சர் பதவியையும், மாவட்ட செயலாளர் பதவியையும் தட்டிச் சென்றார். அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுகவில் இருக்கும் வரை தூத்துக்குடி மாவட்ட அதிமுகவில் அவரது கையே ஒங்கியிருந்தது.
2006ல் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் சீட் கிடைத்த போதிலும் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி செல்வராஜிடம் தோல்வியை தழுவினார். 2009ஆம் ஆண்டில் அனிதா ராதாகிருஷ்ணன் திமுகவிற்கு சென்றதால் பலவீனமாக இருந்த அதிமுகவிற்கு மாவட்ட செயலாளராக எஸ்.பி.சண்முகநாதன் நியமிக்கப்பட்டார்.
2011ஆம் ஆண்டில் மீண்டும் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.பி.சண்முகநாதனுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. அதிமுக பதவியேற்ற உடனேயே இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பதவியும் கிடைத்தது.
உள்கட்சி விவகாரங்களால் 6 மாதத்தில் அமைச்சர் பதவியும், மாவட்ட செயலாளர் பதவியும் பறிபோனது.
செல்லப்பாண்டியனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதால் 2013 ஆம் ஆண்டு மீண்டும் எஸ்.பி.சண்முகநாதன் சுற்றுலா துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். மாவட்ட செயலாளர் பதவியும் சண்முகநாதனை தேடி வந்தது.
2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் எஸ்.பி சண்முகநாதன் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. வெற்றி பெற்ற உடன் பால்வளத்துறை அமைச்சராக பதவியேற்றார். இரண்டே மாதங்களில் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. சிட்டிங் எம்எல்ஏவான எஸ்.பி சண்முகநாதன் மீண்டும் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு விருப்பமனு அளித்தார். முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் எஸ்.பி சண்முகநாதன் பெயர் வெளியாகியுள்ளது.
எம்ஜிஆர் காலத்தில் கிளைச்செயலாளராக அரசியலை தொடங்கிய எஸ்.பி சண்முகநாதன், 43 ஆண்டுகாலமாக அதிமுகவில் எத்தனையோ உட்கட்சி பூசல்களையும் தாண்டி நிலைத்து அரசியல் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.