இன்னும் எத்தனை பேர்? ஆன்லைன் சூதாட்டம்.. ரூ.3 லட்சத்தை இழந்த பட்டதாரி இளைஞர் தற்கொலை!
தூத்துக்குடி: ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி, தந்தை வங்கி செலுத்த கொடுத்த பணத்தோடு சேர்த்து ரூ.3 லட்சத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் தினந்தோறும் இளைஞர்கள் உயிரிழப்பது தொடர்ந்து வருவது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களால் தமிழகத்தில் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அதிகரித்ததால் கடந்த அதிமுக ஆட்சியில் 2020ம் ஆண்டு நவம்பரில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 2021 பிப்ரவரியில் பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது. அச்சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அச்சட்டம் செல்லாது என்று கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி தீர்ப்பளித்தது.
இதையடுத்து மீண்டும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்காக கடந்த நவம்பா் 3ம் தேதி அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. இதைத் தொடா்ந்து, 5ம் தேதி சட்டசபை கூட்டப்பட்டு, மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதேசமயம், அவசர சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது. அரசாணை மட்டும் பிறப்பிக்கப்படாமல் இருந்தது. ஆளுநா் கோரியதன் அடிப்படையில், இந்த மசோதா தொடா்பான உரிய விளக்கங்களை அளிக்கப்பட்டது.
இதுவரை 40.. ஆன்லைன் சூதாட்ட தற்கொலை.. தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் சொல்லும் முக்கிய ஐடியா!
மசோதாவுக்கு ஒப்புதல் இல்லை
ஆனாலும் ஆளுநர் ஆர்என் ரவி ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கு காலதாமதம் செய்ததால் கடந்த மாதமே அந்த தடைச் சட்ட மசோதா காலாவதியாகிவிட்டது. சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து ஆன்லைன் ரம்மி ஆப்களில் பணம் செலுத்தி விளையாடுவது தவிர்க்கப்பட்டிருந்தது.
தற்கொலைகள் அதிகரிப்பு
இந்நிலையில் தடைச் சட்டம் மசோதா காலாவதியாகி விட்ட நிலையில் தற்போது சட்டம் நிறைவேற்றப்படாததால் மீண்டும் ஆன்லைன் ரம்மி சூதாட்டங்கள் அதிகரித்துள்ளன. இதனால் ஏராளமானோர் சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
பொறியியல் பட்டதாரி தற்கொலை
அந்த வகையில் தூத்துக்குடியில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு அடிமையாகி ரூ. 3 லட்சத்திற்கு மேல் பணத்தை இழந்த 30 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை அடுத்த ராமநாதபுரம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் பாலன்.
பொறியியல் பட்டதாரியான இவர், தூத்துக்குடியில் கப்பல் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
ரூ.3 லட்சம் இழப்பு
கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் ஆன்லைன் ரம்மி விளையாட்டை விளையாடி வந்த இவர், ரூ. 3 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. தனது தந்தை வங்கியில் செலுத்த கொடுத்த ரூ.50ஆயிரம் பணத்தையும் சூதாட்டத்தில் இழந்ததால் நண்பனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்தடுத்து தற்கொலை
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி அவசர தடை சட்டம் நிறைவேற்ற பிறகும் ஆளுநர் ஒப்புதல் தாராத நிலையில் தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது தற்கொலை செய்த நிலையில், நேற்று இரவு தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.