நேரத்தை மாற்றுங்க.. திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம்! சுப்ரீம்கோர்ட்டில் 1ம் தேதி விசாரணை
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா அடுத்த மாதம் 7ம் தேதி நடைபெறும் நிலையில், சுமார் 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி, வரும் 4ம் தேதி முதல் திருச்செந்தூருக்கு 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், குடமுழுக்கை காலை நேரத்திலேயே நடத்த வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலுக்கு குடமுழுக்கு விழா நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து 300 கோடி நிதியும் குடமுழுக்கு விழாவுக்காக ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து, கோவிலில் திருமண மண்டபம், கலை அரங்கம், பூங்கா, திருச்செந்தூர் கோவிலில் ராஜகோபுரம் சீரமைப்பு, பக்தர்கள் தங்கும் விடுதிகள் என பல்வேறு வசதிகள் செய்யும் பணிகள் நடந்தன.. மேற்கண்ட பணிகள் அனைத்துமே முடிந்த நிலையில், ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது..
கிரிப்பிரகாரப்பாதை
ஜூலை 7-ம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணி வரை குடமுழுக்கு நடக்கிறது.. தமிழிலும் சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு நடைபெறுகிறது.. இதனால், திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கோயிலில் கிரிப்பிரகாரப்பாதை சீரமைப்பு, கடற்கரை சீரமைப்பு, கடல் அரிப்பு தடுப்புச்சுவர் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
இந்நிலையில், திருச்செந்தூரை சேர்ந்த ஆர்.சிவராம சுப்ரமணிய சாஸ்திரிகள், மதுரை ஹைகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.. அந்த மனுவில் "திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் 7-7-2025 அன்று காலை 6 மணி முதல் காலை 6.47 மணி வரை என நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
தோஷங்கள் - முகூர்த்த நேரம்
அதற்கு பதிலாக, 7-7-2025 மதியம் 12.05 மணி முதல் 12.47 மணி வரை தோஷங்கள் இல்லாத நல்ல முகூர்த்த நேரம் உள்ளது. எனவே அந்த நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை ஹைகோர்ட்டு மதுரைக்கிளை, இந்த ஆண்டு ஹைகோர்ட்டு உத்தரவின்படி கோவில் நிர்வாகம் அமைத்த நிபுணர் குழு முடிவு செய்த காலை நேரத்திலேயே குடமுழுக்கு நடத்தலாம். ஆனால் வரும் காலங்களில் திருச்செந்தூர் கோவில் நிகழ்வு நடைபெறும்போது, கோவில் விதாயகரிடம், எழுத்துப்பூர்வமாக விளக்கம் பெற வேண்டும் என உத்தரவிட்டது.
மீண்டும் அப்பீல் மனு
கும்பாபிஷேக நேரம் மாற்றப்படாததை தொடர்ந்து, ஆர்.சிவராம சுப்ரமணிய சாஸ்திரிகள் தரப்பில் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது.. இந்த மனுவை விரைந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று கூறி நீதிபதி கே.வி.விஸ்வநாதன் தலைமையிலான சுப்ரீம்கோர்ட் விடுமுறை கால சிறப்பு அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.
அப்போது, சென்னை ஐகோர்ட்டு உத்தரவை ஆராயந்த நீதிபதிகள், "குடமுழுக்கு நேரம் கடந்த வருடம் நிர்ணயம் செய்யப்பட்டதன் அடிப்படையில் தான் இப்போதும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் என்ன பிரச்சனை உள்ளது? என்று கேட்டனர்.
நேரமே சரியில்லை
அதற்கு மனுதாரர் தரப்பில், "கடந்த முறை விதாயகர் நேரம் குறித்து தந்தார். இந்த முறை ஐகோர்ட்டு அமைத்த குழு தான் நேரத்தை தீர்மானம் செய்தது.. அந்தக் குழுவே சட்ட விரோதமானது என்று ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது, இந்த விவகாரத்தில் விதாயகரிடம் நேரம் குறித்து தரச்சொல்லாமல், குழுவே தன்னிச்சையாக இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறது.
எனவே கும்பாபிஷேத்தை நண்பகல் நல்ல நேரத்தில் நடத்த வேண்டும்.. இந்த வழக்கை நாளையே அவசரமாக பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.
எனினும் இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் இந்த வழக்கு ஜூலை 1ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications