"ஆத்தா உன் பிள்ளைய காப்பாத்து.." சாமி கும்பிட்டுவிட்டு அம்மன் நகையை அபேஸ் செய்த திருடன்! குபீர்
வேலூர்: அம்மன் கோயிலில் சாமி எல்லாம் கும்பிட்டுவிட்டு சத்தமே இல்லாமல் நகைகளைத் திருடிச் சென்ற நபர் குறித்த வீடியோ இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
திருட்டு சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதில் சிசிடிவி கேமராக்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. சிசிடிவி கேமராக்கள் வந்த பிறகு திருட்டு, கொள்ளை சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளது என்றே சொல்லலாம்.

பல திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் இந்த சிசிடிவி கேமாராக்கள் தான் முக்கிய ஆதாரமாகவே இருந்துள்ளது. அதேபோல திருட்டின் போது நடக்கும் களேபரங்களையும் இது பதிவு செய்யத் தவறுவதில்லை.
திருட்டு சம்பவம்: அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயிலில் இருந்த நகைகள் பட்டப்பகலில் திருடப்பட்டது. இதற்கிடையே அங்கே என்ன நடந்தது.. எப்படி அந்த நபர் நகைகளைத் திருடிச் சென்றார் என்பது குறித்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் கொசப்பேட்டை என்ற பகுதியில் ஆனைகுலத்தம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு சாமி கும்பிடுவது போல வந்த மர்ம நபர் ஒருவரே அம்மன் சிலையில் இருந்த தங்க நகைகளைத் திருடிச் சென்ற ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது.. அதில் அவர் கொள்ளை அடிக்கும் முன்பு பவ்யமாக வந்து சாமி கும்பிட்டு, பூஜை எல்லாம் கூட அந்த நபர் செய்துள்ளார்.
சாமி கும்பிட்டுவிட்டு திருட்டு: இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் பரவி வருகிறது.. கொள்ளையடிக்க வந்த அந்த நபர், முதலில் அங்கிருந்து விபூதியை எடுத்து சாமி கும்பிட்டுள்ளார். மேலும், அங்கிருந்த இரண்டு வாழைப்பழங்களில் ஒன்றை எடுத்துச் சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு சட்டென எழுந்து அம்மன் கழுத்தில் இருந்த தங்க நகைகளை எடுத்துவிடுகிறார். யாரும் தன்னை பார்க்கவில்லை என்பதை உறுதி செய்த அவர், மீண்டும் எதுவும் தெரியாதது போல நெற்றியில் விபூதியை எடுத்துப் பூசிக்கொள்கிறார்.
அதன் பிறகு மீண்டும் அங்கிருந்த மற்றொரு வாழைப்பழத்தையும் எடுத்துச் சாப்பிட்டுவிட்டு, அம்மனை கையெடுத்து வணங்குகிறார். பிறகு அவர் ஒரு மாலையை அணிந்திருந்த நிலையில், அதை எடுத்து அருகே இருந்த தட்டில் வைத்துவிட்டு சாமியைக் கும்பிடுவதைப் போல வணங்குகிறார்.
சிசிடிவி காட்சிகள்: அங்கு கொஞ்ச நேரம் உட்கார்ந்த அவர், மீண்டும் ஒரு முறை எழுந்து சாமியைக் கும்பிட்டுள்ளார். பிறகு தன்னை யாராவது பார்க்கிறார்களா என்பதைச் சுற்றிப் பார்த்து நோட்டமிடுகிறார். பிறகே சத்தமே இல்லாமல் அங்கிருந்து ஓடிவிடுகிறார். இவை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வேகமாகப் பரவி வருகிறது.
என்ன தான் திருட்டு தொழில் செய்தாலும் அவருக்கு வேற லெவலில் தொழில் பக்தி இருப்பதாகப் பலரும் நக்கலடித்து வருகிறார்கள். மேலும், அம்மனிடம் திருட இப்படியெல்லாம் பெர்மிஷன் கேட்கிறாரே யாருப்பா இவரு என்றும் சாடி வருகின்றனர்.
இது தொடர்பாகக் கோயில் நிர்வாகம் போலீசாரிடம் புகார் அளித்துள்ள நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்து வேலூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக இந்த சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications