வேலூர் அருகே தாலி கட்டும் நேரத்தில் மணமகன் தப்பி ஓட்டம்.. மயங்கி விழுந்த மணமகள்.. பெரிய ட்விஸ்ட்
வேலூர்: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் உள்ள ரங்கநாதர் கோவிலில் குடியாத்தம் பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவருக்கும் ஒரு பெண்ணுக்கும் நேற்று காலை திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் நேற்று காலையில் சலூன் கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற மணமகன், நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை.. தாலி கட்டும் நேரத்தில் மணமகன் தப்பி ஓடிச்சென்றதால் திருமணம் நின்றது; இதனால் மணமகள் மயங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுக்கும் திருமணம் செய்வது என்று பெற்றோர்கள் நிச்சயம் செய்து முடிவு செய்தனர். இவர்களது திருமணம் நவம்பர் 20ம தேதியான நேற்று காலை நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை இரு வீட்டார்களும் செய்து கொண்டிருந்தனர். நிச்சயித்தபடி நேற்று காலை காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் பள்ளிகொண்டா ரங்கநாதர் கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது.

திருமணத்தையொட்டி நேற்றிரவு மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது. இதில் இருதரப்பு குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டார்கள். நேற்று காலையில் திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்தது. சுமார் 9 மணி அளவில் மணக்கோலத்தில் மணமகள் மணமேடைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
முன்னதாக காலை 8 மணி அளவில் மணமகன் ஐயப்பன், சலூன் கடைக்கு சென்று வருவதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றிருக்கிறார். ஆனால் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் மணமகன் வராததால் அனைவரும் பதறிப்போனார்கள்.
மணமகள் மணமேடையில் அமர்ந்திருந்த நிலையில் சடங்குகள் செய்வதற்காக, புரோகிதர் மணமகனை அழைத்திருக்கிறார். ஆனால் மணமகன் ஐயப்பன் வரவே இல்லை. இரு தரப்பும் மாறி மாறி விசாரித்துக் கொண்டிருந்தார்கள். கடைசி வரை மணமகன் எங்கு சென்றார் என தெரியாமல் தவித்தனர். மணமேடையில் அமர்ந்திருந்த மணமகளும் பதற்றத்திற்கு உள்ளாகினார்கள்.
இதையடுத்து இருதரப்பினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் மணமகன் ஐய்யப்பனை தேடினர். அவரது செல்போனும் 'சுவிட்ச் ஆப்' என வந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். காலை 10.30 மணி வரை தேடியும் மணமகனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் மணமகள் மேடையில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மணமகன் மாயமானதால் திருமணம் நின்றுபோனது. இதையடுத்து இருதரப்பினரும் வேதனையுடன் கோவிலில் இருந்து திரும்பிச் சென்றார்கள். தாலி கட்டும் நேரத்தில் மணமகன் மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications