Exclusive: உடலில் 3 கிலோ தங்கம்... நடமாடும் நகைக்கடை... திமுக ஒன்றியத் தலைவரின் பின்னணி என்ன..?
வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி ஊராட்சி ஒன்றியத் தலைவராக வெற்றிபெற்றிருக்கும் வேல்முருகன் என்பவர், உடலில் 3 கிலோ தங்கத்துடன் உலா வருவது மக்களை மலைக்க வைத்துள்ளது.
பெங்களூருவில் தொழில் செய்துகொண்டிருந்த வேல்முருகன், காட்பாடி ஒன்றியத் தலைவரானதன் பின்னணியில் அமைச்சர் துரைமுருகனும் அவரது மகன் கதிர் ஆனந்தும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
நடமாடும் நகைக்கடையாக உலா வரும் இவருக்கு ரூ.22 கோடிக்கும் மேலாக சொத்துக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வேலூர் மாவட்டம்
அண்மையில் நடைபெற்ற 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றியத் தலைவராக வெற்றிபெற்றிருக்கிறார் வேல்முருகன். உடல் முழுக்க நகைகள் ஜொலிக்க உலா வரும் இவர் பெங்களூருவில் பெட்ரோலியம் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். 16 வயதில் சொந்த ஊரை விட்டு பெங்களூருக்கு சென்ற அவர், இன்று 48 வயதாகும் நிலையில் ரூ.22 கோடி மதிப்புள்ள சொத்துக்களை சேர்த்திருக்கிறார்.

பிரமிப்பு
காட்பாடி ஒன்றியத் தலைவர் வேல்முருகனின் கை, விரல்கள், கழுத்து என கட்டி கட்டியாக பல சவரன் நகைகள் ஜொலிக்கின்றன. திருமணம் மற்றும் சுபகாரிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும் போது 3 கிலோ தங்க நகைகளை உடலில் சுமந்து கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் இவரை காட்பாடி பகுதி மக்கள் பிரமிப்போடு மலைத்து பார்த்து வருகின்றனர்.

ஆச்சரியம்
வேல்முருகனுக்கு துரைமுருகனின் ஆசியும், அவரது மகன் கதிர் ஆனந்த் ஆதரவும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தான் இவரால் எளிதாக காட்பாடி ஒன்றியத் தலைவர் பதவியை கைப்பற்ற முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. வேல்முருகனின் திடீர் அரசியல் வருகையையும், தலைவரானதையும் இன்னும் ஆச்சரியம் விலகாமலேயே தங்களுக்குள் விவாதித்துக் கொள்கின்றனர் காட்பாடி பகுதி உ.பி.க்கள்.

விளக்கம்
இந்நிலையில் இது தொடர்பாக காட்பாடி ஒன்றியத் தலைவர் வேல்முருகனிடம் நாம் பேசினோம், முதலில் மீட்டிங்கில் இருப்பதாக கூறிய அவர் பின்னர் நமது கேள்விக்கு விடையளிக்க முன் வந்தார். அதன்படி, ''நான் 28 வயதிலிருந்து உடலில் நகைகள் அணிந்து வருகிறேன். உடலில் நிறைய நகைகளை அணிய வேண்டும் என்பது எனது இளம் வயது ஆசை. தற்போது என்னிடம் 3 கிலோ தங்கம் உள்ளது. எல்லாவற்றுக்கும் முறையான ஆவணங்கள் வைத்திருக்கிறேன். வேட்பு மனுவின் போது கூட ஒளிவுமறைவின்றி அனைத்துச் சொத்து விவரங்களையும் தெரிவித்திருக்கிறேன்.''

சொந்த உழைப்பு
''நான் தற்போது மக்கள் பிரதிநிதியாகிவிட்டதால் உடலில் நகைகள் அணிவதை தவிர்த்துவிட்டேன். ஆனாலும் நகைகளை அணிந்துகொண்டு திரிவதாக எழுதுகிறீர்கள். எல்லாமே எனது சொந்த உழைப்பில் சம்பாதித்தது. இதனால் யாருக்கும் அஞ்ச வேண்டிய நிலை எனக்கில்லை. 1990-ம் ஆண்டே திமுக உறுப்பினராக சேர்ந்துவிட்டேன். இப்போது நான் காட்பாடியிலேயே முழு நேரமாக தங்கிவிட்டதால், பெங்களூருவில் எனது மகன் தொழிலை கவனித்துக் கொள்கிறார்'' என விளக்கம் அளித்தார்.












Click it and Unblock the Notifications