யாரு நான் சீனியரு? என் பேச்சை எல்லாரும் கேட்பாங்களா? கே.என். நேருவை நம்பாதீங்க! .. துரைமுருகன் கலகல
வேலூர்: நான் சீனியர், நான் சொன்னால் கேட்பாரா, முதலில் பேசுகிறேன் என சொன்னேன், அதையே கேட்காமல் அவர் எழுந்து போய் பேசிவிட்டார் என அமைச்சர் கே.என்.நேருவை கிண்டல் செய்து அமைச்சர் துரைமுருகன் பேசியிருந்தது சிரிப்பை ஏற்படுத்தியிருந்தது.
வேலூரை அடுத்த காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் திமுக சார்பில் தமிழக சட்டசபை நிதி நிலை விளக்க பொதுக் கூட்டம் நேற்று நடந்தது. அதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் பங்கேற்று பட்ஜெட் அறிக்கை குறித்து பேசினர்.
இந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில் அமைச்சர் துரைமுருகன் எங்களுக்கு பேராசிரியர். நாங்கள் எல்லாருமே அவருடைய மாணவர்கள்தான். அவர் அறிவுறுத்தலின்படி அவர் சொல்வதை நாங்கள் செய்து வருகிறோம்.

சட்டத்தை படித்து விட்டு சட்டசபையின் முன்னவராக இருக்கிறார். அவரை போல் அவை முன்னவராக யாராலும் இருக்க முடியாது. காட்பாடி மக்களுக்கு அவர் நிறைய திட்டங்களை செய்து கொடுத்துள்ளார். அவர் மனம் வருந்தும்படி யாரும் நடந்து கொள்ள வேண்டாம் என மக்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் நேரு போதும் போது நான் சீனியர், நான் சொல்வதைத்தான் கேட்பேன் என சொன்னார். அதெல்லாம் கிடையாது. இந்த பொதுக் கூட்டத்தில் நான் முதலில் பேசுகிறேன் என சொன்னேன். ஆனால் அவர் அதையே கேட்கவில்லை. முதலில் பேச எழுந்து போய்விட்டார். காட்பாடி நகரம் நன்கு வளர்ச்சி அடைந்துவிட்டது.
காட்பாடியில் உள்ள காவல் நிலையத்தில் அதிக வழக்குகள் வருகின்றன. சமாளிக்க முடியவில்லை என டிஎஸ்பி கூறியிருந்தார். சட்டசபையில் துண்டுச்சீட்டில் எழுதி முதல்வர் ஸ்டாலினிடம் காண்பித்தேன். அப்போதே சட்டசபையில் பிரம்மபுரம் பகுதியில் மேலும் ஒரு காவல் நிலையத்தை அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
அம்மாவுக்கு ஆயிரம் பொண்ணுக்கு ஆயிரம் கொடுத்தாச்சு.. பஸ் விட்டிருக்கோம்.. போர் அடிச்சா பஸ் ஏறி ஆற்காடு போங்க! அங்கு வரும் பஸ்ஸில் மீண்டும் ஏறி குடியாத்தம் போங்க. யாரு என்ன கேட்க போகிறார்கள். இதே போல் 23 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்துள்ளோம். 1962 ஆம் ஆண்டு முதல் கலைஞருடன் நான் பழகி கொண்டிருந்தேன். ஆனால் 1971 ஆம் ஆண்டு வரை அவருக்கு நான் என்ன ஜாதி என்றே தெரியாது.
அப்படிப்பட்ட பழக்கம் எங்களுக்குள் இருந்தது. அப்பேற்பட்டவர், என்னை வளர்த்தவர். கோபாலபுரம் வீட்டிற்கு நான் சென்ற போது ஸ்டாலின் சின்ன பையன். நாங்கள் எல்லாம் ஓய் என மிரட்டினால் ஓடிபோய்விடுவார். பிறகு தோளுக்கு மேல் வளர்ந்து தோழனாகிவிட்டார். இன்று தலைக்கு மேல் வளர்ந்து எனக்கே தலைவனாகிவிட்டார். நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.
தலைவனின் (கலைஞர்) மகனை என் தோளில் சுமப்பதிலே எனக்கு என்ன வெட்கம். அதைத்தான் நான் சொன்னேன் கோபாலபுரத்து விசுவாசி என்று! அதை சொல்லும் தைரியம் உனக்கு உண்டு. நான் என் இறுதி மூச்சு வரை அப்படித்தான் இருப்பேன். கட் அவுட் வைக்காதீர்கல் என சொல்கிறோம். ஆனால் காட்பாடியில் மட்டும் கட் அவுட் வைக்கலாம் என்று சட்டம் இருக்கா. கட் அவுட் வைக்கும் வேலைகளை நிறுத்துங்கள். மீறி வைத்தால் அந்த விழாவுக்கு நான் வரவே மாட்டேன் என துரைமுருகன் எச்சரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications