குடும்ப அட்டைதாரர்களே.. 'நாளை ஒரே நிமிடத்தில் எல்லாம்'.. வெளியான முக்கிய அறிவிப்பு
வேலூர்: பொது வினியோக திட்டத்தின் சேவைகள் அனைத்து மக்களுக்கும் வழங்கும் பொருட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெற உள்ளதாகவும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் போன்ற பணிகளை உடனுக்குடன் செய்யலாம் என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி வெளியிட்ட அறிவிப்பில், " பொது வினியோக திட்டத்தின் சேவைகள் அனைத்து மக்களுக்கும் வழங்கும் பொருட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெற உள்ளது.

இதில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல், குடும்ப அட்டைக்கு மனு செய்தல், செல்போன் எண் பதிவு செய்தல், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் பொது வினியோக திட்ட பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதனையும் முகாமில் தெரிவித்து தீர்வு காணலாம்.
வேலூர் தாலுகாவில் சதுப்பேரி, காட்பாடி தாலுகாவில் தீயார்குப்பம், அணைக்கட்டு தாலுகாவில் முத்துகுமரன்மலை, குடியாத்தம் தாலுகாவில் ஏரிபட்டரை, கே.வி.குப்பம் தாலுகாவில் திருமணி, பேரணாம்பட்டு தாலுகாவில் கார்கூர் ஆகிய கிராமங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் மனுதாரர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் ஆவணங்களின் நகலுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம்" இவ்வாறு வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
ரேஷன் கார்டில் குழந்தையின் பெயரை சேர்க்க ஆவணம்: உங்கள் ரேஷன் கார்டில் குழந்தையின் பெயரைச் சேர்ப்பதற்கு பிறப்புச் சான்றிதழ், குடும்பத் தலைவரின் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டின் நகல் ஆகியவை வேண்டும். வேறு ஆவணங்கள் எதுவும் தேவையில்லை. குழந்தையின் ஆதார் இருந்தால் அதையும் கொடுக்கலாம். அதை வைத்து உங்கள் குழந்தையின் பெயரை ரேஷன் கார்டில் நாளை உடனே சேர்க்கலாம்.
குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க ஆவணம்: இதேபோல் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நாளை எளிதாக விண்ணப்பிக்க முடியும். எல்லா அதிகாரிகளும் முகாம்களில் இருப்பார்கள் என்பதால் உங்கள் விண்ணப்பம் உடனே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வாய்ப்பு உள்ளது. புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், திருமணம் ஆன பின்னர் அவரவர் வீட்டின் ரேஷன் கார்டில் பெயரை நீக்கியிருக்க வேண்டும். நீக்கியதற்கான ஆவணம், திருமணம் நடந்ததற்கான ஆவணம், இருவரின் ஆதார் கார்டு, முகவரி சான்றிதழ் போன்றவை வேண்டும். இவை இருந்தால் நாளை உடனடியாக புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும். குடும்ப அட்டையில் பெயரை நீக்க வேண்டும் என்றால், யாருடைய பெயரை நீக்க வேண்டுமோ அவர்கள், ஆதார் கார்டு நகலுடன் சென்றால் உடனே நீக்கி கொள்ள முடியும். இதேபோல் செல்போன் எண் பதிவு செய்தல். குடும்ப தலைவரின் படத்தை மாற்ற வேண்டும் என்றாலும் உடனே மாற்றித்தருவார்கள்.












Click it and Unblock the Notifications