"2026ல் மிகப்பெரிய கூட்டணி".. வேலூரில் உறுதிப்படுத்திய எடப்பாடி பழனிச்சாமி.. ஸ்டாலின் மீது ‛அட்டாக்’
வேலூர்: ‛‛அதிமுக பற்றி பேச முதல்வர் ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை. திமுக அதன் கூட்டணி கட்சிகளை மட்டுமே நம்பி உள்ளது. அதிமுக மக்களையும், முந்தைய ஆட்சியில் செய்த திட்டங்களையும் நம்பி உள்ளது. கூட்டணிக்காக அதிமுகவை மற்றவர்கள் நாடி வருவார்கள். 2026 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக மிகப்பெரிய வெற்றி கூட்டணியை அமைக்கும்'' என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகும் பணியை தொடங்கி விட்டன. அதிமுக சார்பில் பொதுக்கூட்டங்கள், ஆலோசனை கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அதிமுக இளைஞர்கள் - இளம்பெண்கள் பாசறையின் லட்சிய மாநாடு வேலூர் கோட்டை மைதானத்தில் இன்று நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் அதிமுகவின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று பேசினார்.
இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் 2026ல் அதிமுக கூட்டணி தொடர்பாக பேசினார். இதுபற்றி எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: தமிழகத்தில் திமுக எப்போதுமே அதன் கூட்டணி கட்சியை தான் நம்பி உள்ளது. ஆனால் அதிமுக அப்படி கிடையாது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் மற்றும் மக்களை நம்பி தான் இருக்கிறது.
இதனால் நாங்கள் எப்போது யாரையும் நாடி செல்வது கிடையாது. எங்களை தான் மற்றவர்கள் நாடி வருவார்கள். மற்றவர்களை நாடி செல்லும் நிலை வந்தது இல்லை. கூட்டணி எதற்காக வைக்கிறோம். ஓட்டுகள் சிதறாமல் இருக்க தான் கூட்டணி வைக்கப்படுகிறது. சிதறாமல் ஓட்டுகள் கிடைக்க வரும் 2026ல் அதிமுக தலைமையில் மிகப்பெரிய வெற்றி கூட்டணி அமைக்கும்.
ஏனென்றால் நம்முடைய மேடையில் உள்ள நிர்வாகிகள், இங்கு வந்துள்ள பாசறை நிர்வாகிகள் அனைவரும் கூட்டணி அமைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். எதற்காக அப்படி சொல்கிறார்கள்? கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக சொல்கிறார்கள். இதனால் உங்களின் கோரிக்கையை ஏற்று 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையில் வலிமையான வெற்றி கூட்டணி அமையும்.
அதிமுகவை பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதியில்லை. ஸ்டாலின் வெளியே செல்லும்போது அவரை பார்த்து அப்பா என்று அழைக்கின்றனராம். குழந்தைகள், பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி அப்பா... அப்பா.. என்று கதறும் சத்தம் அவருக்கு கேட்கிறதா? என்று பொதுமக்கள் கேட்கிறார்கள்'' என்று சாடினார்.












Click it and Unblock the Notifications