'தக்க ஆலோசனை'.. அப்படியே பல்டி அடித்த கே.வி.குப்பம் எம்எல்ஏ.. குஷியில் பூவை ஜெகன்மூர்த்தி
வேலூர்: கே.வி.குப்பம் (தனி) தொகுதியை கூட்டணி கட்சியான புரட்சி பாரதம் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டதை கண்டித்து அந்த தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏ லோகநாதன், போராட்டம் நடத்தி வந்தார். ஆனால் அவரை அதிமுக தலைமை நேரில் அழைத்து தக்க ஆலோசனை வழங்கிய பின்னர், அப்படியே பல்டி அடித்து கூட்டணி வேட்பாளர் பூவை ஜெகன்மூர்த்திக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து வருகிறார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.குப்பம் தொகுதியில் கடந்த இரண்டு முறையும் அ.தி.மு.க-வே வெற்றி பெற்றுள்ளது. லோகநாதன் என்பவர் தற்போதும் எம்எல்ஏவாக உள்ளார். அவர் அங்கு மீண்டும் சீட் கேட்டிருந்தார். ஆனால் திடீர் திருப்பமாக கூட்டணியிலிருக்கும் புரட்சி பாரதம் கட்சிக்கு கே.வி.குப்பம் தொகுதி ஒதுக்கப்பட்டது.
புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி இரட்டை இலை சின்னத்தில் கேவி குப்பம் தொகுதியில் களம் இறங்கி வாக்கு சேகரித்து வருகிறார். ஆனால் தனக்கு மீண்டும் சீட் கிடைக்காத கோபத்தில் இருந்த சிட்டிங் எம்.எல்.ஏ லோகநாதன் போராட்டத்தில் இறங்கினார்.
எதிர்ப்பு
எனக்கு சீட் கிடைக்காமல் போக அமைச்சர் வீரமணி காரணம் என்று கூறியதுடன் மற்ற தொகுதிகளில் சீட் கிடைத்த வேட்பாளர்களிடம் பணம் வாங்கியதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் கூட்டணி வேட்பாளருக்கு வேலை செய்ய முடியாது என்றெல்லாம் பேசி ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் குதித்து இருக்கிறார்.
ஆச்சர்யம்
இந்த நிலையில், அவர் எதிர்ப்பில் இருந்து பின்வாங்கி உள்ளார். கூட்டணி வேட்பாளர் பூவை ஜெகன்மூர்த்தி எதிர்த்து பேசியவர் இன்று அவருக்காக வாக்கு சேகரித்து வருகின்றார். பூவை ஜெகன்மூர்த்தி வெற்றி பெற செய்து காட்டுவோம் என்று சிட்டிங் எம்எல்ஏ லோகநாதன் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.
ஏன் இப்படி
கே.வி.குப்பம் ஒன்றியக்குழு தலைவராக உள்ள சிட்டிங் எம்எல்ஏ லோகநாதன், அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலாளர் பொறுப்பு வகித்து வருகிறார். அவர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்ததை அறிந்த அதிமுக மேலிடம் தக்க ஆலோசனையும் அறிவுரையும் கூறியதுடன், ஜெயிக்க வைக்க உழையுங்கள் என கூறி அனுப்பி வைத்திருக்கிறது. இதை ஏற்றுக்கொண்டு கூட்டணிக் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பணி செய்து வருகிறாராம்.
குஷியில் பூவை ஜெகன்மூர்த்தி
இதனால் எப்படியோ எதிர்ப்புகளை சமாளித்து விட்டோம் என நிம்மதியாக பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார் பூவை ஜெகன்மூர்த்தி. திமுக சார்பில் கேவி குப்பம் தொகுதியில் கே.சீதாராமன்(62) என்பவர் திமுக சார்பில் களம் இறங்கி உள்ளார். ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து நடத்துநரான இவர் கே.வி.குப்பம் மேற்கு ஒன்றியப் திமுக பொறுப்பாளா் ஆவார். .வி.குப்பம் ஒன்றியக் குழுத் தலைவராக உள்ளார். 2011-இல் கே.வி.குப்பம் தொகுதி பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவா் ஆவார். இந்த முறை திமுகவிடம் கடும் சவாலை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் என்பதால் பூவை ஜெகன்மூர்த்தி தீவிரமாக வேலை செய்து வருகிறார்.