திருப்பத்தூர் பஞ்சாயத்து தலைவருக்கு ஒரே நாளில் 10 லட்சம் சம்பாத்தியம்.. ஆனாலும் விடாத ஆசையால் ஆப்பு
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஜனதாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் சீனிவாசன் என்பவர் மேல்சான்றோர்குப்பம் என்ற கிராமத்தில் 7 ஏக்கர் நிலத்தில் வீட்டுமனை அமைப்பதற்காக முயற்சி செய்துள்ளார். ஆனால் வீட்டுமனை அங்கீகாரத்திற்கு ரூ.12 லட்சம் லஞ்சம் கேட்டதாக ஊராட்சி மன்ற தலைவர் மீது புகார் எழுந்தது. இது தொடர்பான புகாரில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஊராட்சி மன்ற தலைவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
வீட்டு மனைக்கு அங்கீகாரம் பெற சில ஊர்களில் லஞ்சம் கேட்பது நடப்பதாக புகார்கள் உள்ளது. அப்படி லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு கப்பம் கட்டிவிட்டு, சிலர் சத்தம் இல்லாமல் வீட்டு மனைக்கு அங்கீகாரம் வாங்கி வீடுகளை விற்று இருப்பார்கள். ஆனால் திருப்பத்தூர்மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் வீட்டு மனை அங்கீகாரத்திற்கு விண்ணப்பித்த ரியல் எஸ்டேட் அதிபர் லஞ்சம் கேட்டதாக கூறப்படும் பஞ்சாயத்து தலைவருக்கு பாடம் கற்பித்துள்ளார்.

வீட்டு மனை அங்கீகாரம்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஜனதாபுரம் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சீனிவாசன் என்பவர் ஆம்பூர் அடுத்த மேல்சான்றோர்குப்பம் ஊராட்சிக்கு பின்புறம் அமைந்துள்ள 7 ஏக்கர் நிலத்தில் வீட்டுமனை அமைப்பதற்காக ஊராட்சி மன்ற தலைவர் 400 வயதாகும் சிவக்குமாரை அணுகியுள்ளார்.
டி.டி.சி. அங்கீகாரம்
ஆனால் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் டி.டி.சி. அங்கீகாரம் பெறுவதற்காக சீனிவாசனிடம் ரூ.12 லட்சம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. அதன்படி சீனிவாசன் கடந்த ஓரு ஆண்டில் ரூ.10 லட்சம் கொடுத்தாராம். இந்த நிலையில் மீண்டும், மீண்டும் பணம் கேட்டு அவர் மிரட்டினாராம். இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன் திருப்பத்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார்.
2 லட்சம் லஞ்சம்
அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய 2 லட்சம் ரூபாய் நோட்டுகளை சீனிவாசனிடம் கொடுத்துள்ளனர். அதை ஊராட்சிமன்ற தலைவர் சிவக்குமாரிடம் கொடுக்குமாறு அனுப்பி வைத்தார்கள். அதன்படி நேற்று வாணியம்பாடி நியூடவுன் பைபாஸ் சாலைக்கு ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமாரை வரவழைத்து சீனிவாசன் ரூ.2 லட்சத்தை கொடுத்திருக்கிறாராம்.
கையும் களவுமாக கைது
அப்போது அங்கு மறைந்திருந்த திருப்பத்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராஜீவ், இன்ஸ்பெக்டர் கவுரி, சப்- இன்ஸ்பெக்டர் கணேசன் உள்ளிட்ட போலீசார், ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் வாணியம்பாடி பைபாஸ் சாலையின் அருகில் உள்ள நகராட்சி அலுவலகத்திற்கு அவரை அழைத்து சென்று ஒரு அறையில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர். வீட்டுமனை அங்கீகாரத்திற்கு ரூ.12 லட்சம் லஞ்சம் பெற்று ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் வாணியம்பாடியில் ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications