இனி இருக்கு.. “கார்ல கட்டுனதுக்கு பொங்குனீங்களே” - இன்று சி.வி.சண்முகம் கோட்டையிலேயே இறங்கிய சசிகலா!
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த முன்னாள் அதிமுக பிரமுகர் முகமது ஷெரீப் தற்போது சசிகலா ஆதரவாளராக மாறியிருக்கிறார். இவர் சி.வி.சண்முகத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தவர்.
ஷெரீப்பின் இல்ல திருமண விழாவுக்கு சசிகலா வருகை தந்ததால் அவரை வரவேற்று பேனர்கள், கொடிகள் வைக்கப்பட்டிருந்தன. அதிமுக கொடியை சசிகலாவை வரவேற்க பயன்படுத்தியதால் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
சசிகலா விடுதலையாகி பெங்களூரில் இருந்து வந்தபோது காரில் அதிமுக கொடி கட்டியிருந்ததை கடுமையாக விமர்சித்தார் சிவி.சண்முகம். இன்று அவரது கோட்டையிலேயே சசிகலாவுக்காக அதிமுக கொடி பறந்திருக்கிறது.

சிவி சண்முகம்
முன்னாள் அமைச்சரான சி.வி.சண்முகம் விழுப்புரம் மாவட்ட அதிமுகவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா டீமில் கூவத்தூரில் இருந்த சி.வி.சண்முகம், சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு முழு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராக மாறி சசிகலா, தினகரன் தரப்பை கடுமையாகச் சாடி வருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அவர் தோல்வியடைந்த நிலையில், தற்போது ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சசிகலா காரில் அதிமுக கொடி
சசிகலா விடுதலையாகி பெங்களூர் சிறையில் இருந்து வரும்போது, அதிமுக கொடியை பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்முதலில் சொன்னவர் அதிமுகவின் அப்போதைய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று டிஜிபியிடமும் புகார் அளித்தார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்.

கருவாடு கூட மீன் ஆகலாம்
மேலும், கருவாடு கூட மீனாகிவிடலாம். சசிகலா ஒருநாளும் அதிமுகவுக்குள் வர முடியாது. இந்த இயக்கத்தில் சசிகலா எங்கே இருந்தார் என்பதே தெரியாது. அவருக்கும், அதிமுகவின் சரித்திரத்திற்கும் சம்பந்தமே இல்லை. ஜெயலலிதா வீட்டில் வேலைக்காரராக இருந்தார். வேலை முடிந்தது அவர் சென்றுவிட்டார். அவ்வளவுதான். அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்றும் இதுவரை பலமுறை கடுமையான வார்த்தைகளால் சசிகலாவை விமர்சித்துள்ளார் சி.வி.சண்முகம்.

முகமது ஷெரீப்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஷெரீப். இவர் அதிமுகவில் மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளராகவும் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் தீவிர ஆதரவாளராகவும் இருந்து வந்தவர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஷெரீப் கவுன்சிலர் சீட் கேட்ட நிலையில், அடுத்த முறை பார்க்கலாம் என சி.வி.சண்முகம் கூறியதால், அதிருப்தி அடைந்து சி.வி.சண்முகத்திற்கு எதிரியாக இருந்து வரும் சசிகலா டீமுக்கு தாவினார்.

பதவி நீக்கம்
சசிகலாவிற்கு ஆதரவாக செயல்பட்டதன் காரணமாக சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார் ஷெரீப். இந்நிலையில், அவர்தான் லோக்கல் அரசியலில் சி.வி.சண்முகத்திற்கு பெரும் குடைச்சலாக மாறியுள்ளார். சசிகலாவை மிகக் கடுமையாக விமர்சித்த சி.வி.சண்முகத்தை பழிவாங்க, ஷெரீப்பை அஸ்திரமாக பயன்படுத்தி வருகிறார் சசிகலா எனக் கூறப்படுகிறது.

திருமணத்திற்கு சசிகலா வருகை
ஷெரீப்பின் மகள் திருமணம் திண்டிவனத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த திருமணத்திற்கு சசிகலா வருகை புரிந்தார். முன்னதாக அவரை சவரவேற்பதற்கு ஷெரீப் தலைமையிலான சசிகலா ஆதரவாளர்கள் அதிமுக கொடிகளை திண்டிவனம் முழுவதும் நடும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக சசிகலாவை வரவேற்க அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என அதிமுக எம்.எல்.ஏ அர்ஜூனன் தலைமையில் அதிமுகவினர் போலீசில் மனு அளித்திருந்தனர். அதை மீறி ஷெரீப் ஆதரவாளர்கள் கொடிகளை நட்டதால் அதிமுகவினர் அவற்றை அகற்றினர்.

மோதல்
இதையடுத்து, மீண்டும் அதே இடத்தில் அதிமுக கொடிகளை நட சசிகலா ஆதரவாளர்கள் நட முயன்றனர். தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அதிமுகவினரை கண்டித்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சி.வி.சண்முகத்தின் தூண்டுதலால் அதிமுகவினர் ரகளை செய்வதாக சசிகலா ஆதரவாளர்களான ஷெரீப் தரப்பினர் குற்றம்சாட்டினர்.

அதிமுக கொடி
சி.வி.சண்முகம் மட்டுமல்ல, யார் தடுத்தாலும் சரி கழகக்கொடி இன்னும் அதிகமாக பறக்கும். சின்னம்மா வருவது உறுதி. அதை தடுக்க எந்த முயற்சி வேண்டுமானாலும் அவர்கள் எடுக்கட்டும் என ஷெரீப் தெரிவித்தார். அதிமுக கொடி கட்டும் விவகாரத்தில் மோதல் ஏற்பட்டதையடுத்து அப்பகுதியில் கடும் பரபரப்பு நிலவியது.

தீராத கொடி பிரச்சனை
சசிகலா விடுதலையாகி பெங்களூர் சிறையில் இருந்து தமிழகம் வந்தபோது அவரது காரில் அதிமுக கொடி கட்டியிருந்ததை கடுமையாக விமர்சித்தார் முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம். இன்று சி.வி.சண்முகத்தின் கோட்டையிலேயே சசிகலாவுக்காக அதிமுக கொடி பறந்திருக்கிறது. தொடர்ந்து சி.வி.சண்முகத்துக்கு குடைச்சல் கொடுக்க சசிகலா தரப்பினர் திட்டமிட்டுள்ளனராம். இதுதான் விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விவகாரமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications