சசிகலா மீது நேரடி அட்டாக்.. செந்தில் பாலாஜிக்கு நன்றி சொல்லி.. சி.வி.சண்முகம் பொளேர் பேச்சு
விழுப்புரம்: அண்ணா திமுக யாருடைய தயவையும் நம்பி இல்லை.என்றும், சசிகலாவால் தினகரனின் கட்சியை ஜெயிக்க வைக்க திறமை இல்லை, இவர் அதிமுகவிற்கு வரப்போகிறாரா என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பினார்.
மின்வெட்டு பிரச்சனைக்கு அணிலும் ஒரு காரணம் என்று கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சித்த சிவி சண்முகம், அணில்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக கூறிய செந்தில் பாலாஜிக்கு நன்றி என்றும் கிண்டல் செய்தார்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
சசிகலாவால் முடியவில்லை
அப்போது அவர் கூறும்போது, '' சசிகலா அங்கு பேசினார்கள், இங்கு பேசினார்கள் என்பதை விட்டுவிடுங்கள். முதலில் பினாமி கட்சியான தினகரனை வெற்றிபெற வைக்க முடியவில்லை. இவர் (சசிகலா) அண்ணா திமுகவிற்கு வரப்போகிறாரா? அண்ணா திமுக யாருடைய தயவையும் நம்பி இல்லை. ஒன்றரை கோடி தொண்டர்களை நம்பி உள்ள இயக்கம். 10 ஆண்டு காலம் ஆட்சி பொறுப்பில் இருந்துவிட்டு, ஆட்சியை இழந்தாலும், எதிர்க்கட்சியாக 66 இடங்களை பெற்று உள்ளோம்.
2006ஐவிட அதிகம்
2006ல் 66 இடங்களை பெற்றோம். ஆனால் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து ஆட்சியை இழந்தாலும் தற்போது 66 இடங்களில் வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக உள்ளது. அதிமுகவிற்கும், திமுகவிற்கும் 3 சதவீத வாக்கு வித்தியாசம்தான். யாருடைய தயவும் அண்ணா திமுகவிற்கு தேவையில்லை என்றார்.
கனிமொழி ஆ ராசா
அதிமுக ஆட்சியின் சிஏஜி அறிக்கைகள் குறித்து பதில் அளித்த சி.வி.சண்முகம், மத்திய தணிக்கைத் துறை அறிக்கையை திமுக ஏற்றுக் கொள்கிறதா? ரூ.1.75 லட்சம் கோடி முறைகேடு நடைபெற்றதாக மத்திய தணிக்கைத் துறை கூறியிருந்த நிலையில் ஆ.ராசாவும் கனிமொழியும் சிறையில் இருந்து தற்போது ஜாமினில் உள்ளார்கள். இது தொடர்பான மேல் முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஏன் ஆ.ராசா மற்றும் கனிமொழி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
சிவி சண்முகம் கிண்டல்
மின் வெட்டு பிரச்சனை குறித்து பேசிய சி.வி. சண்முகம், அமைச்சர் செந்தில் பாலாஜியை கிண்டல் செய்தார். இதுபற்றி கூறும் போது,. தற்போது மின்சார வாரியம் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டுள்ளது. எல்லா அணில்களையும் பிடித்துவிட்டார்கள். இனிமேல் மக்கள் அச்சப்படத் தேவையில்லை. இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய செய்தி வெளியாகியுள்ளது. பராமரிப்புப் பணிகள் முடிந்து, அணில்கள் ஒழிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் கூறியுள்ளார். மிக்க நன்றி'' என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.