2013ம் ஆண்டு மரக்காணம் கலவர வழக்கு.. பாமகவினர் 20 பேரும் விடுதலை.. திண்டிவனம் நீதிமன்றம் தீர்ப்பு!
விழுப்புரம்: மரக்காணத்தில் 2013ல் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் சாட்சியங்கள் இல்லாததால் குற்றம்சாட்டப்பட்ட பாமகவினர் 20 பேரையும் விடுதலை செய்து திண்டிவனம் நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் கடந்த 2013 ஏப்ரல் 23ல் வன்னியர் சங்கத்தின் இளைஞர் பெருவிழா நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து வன்னியர்கள் திரளாக பங்கேற்றனர்.
நவம்பர் 1 உள்ளாட்சிகள் தினம்! ஆண்டுக்கு இனி 6 முறை கிராம சபை கூட்டங்கள்! முதலமைச்சர் அறிவிப்பு!
பாமகவைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து மகாபலிபுரத்திற்கு பல்வேறு வாகனங்களில் சென்றனர்.
மரக்காணம் கலவரம்
அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த சேர்ந்தவர்கள் மரக்காணம், கிழக்கு கடற்கரை சாலை வழியாக மகாபலிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மரக்காணம் பகுதியில் வைத்து சிலருக்கும், மாநாட்டுக்கு சென்றவர்களுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இது எல்லை மீறவே கைக்கலப்பு உருவாகி அடிதடியாக மாறியது. கலவரம் ஏற்பட்டது.
வாகனங்களுக்கு தீவைப்பு
இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்த கலவரம் எல்லை மீறவே அரசு, தனியார் பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன. வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்தினர். இதுகுறித்து மரக்காணம் போலீசார் பாமகவினர் 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அனைவரும் விடுதலை
இந்த வழக்கு திண்டிவனம் கூடுதல் மாவட்ட 2வது அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 20 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி சுதா வழக்கை விசாரித்து வந்தார். இன்று நீதிபதி சுதா தீர்ப்பு வழங்கினார். அதில் அரசு தரப்பில் போதுமான சாட்சியங்கள் அளிக்கப்படாததால் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் பாமக தரப்பில் வழக்கறிஞர் பாலாஜி ஆஜரானார்.
ராமதாஸ் வரவேற்பு
இந்த தீர்ப்பை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், ‛‛மரக்காணம் கலவரம் தொடர்பாக புனையப்பட்ட பொய் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட அனைத்து பாமகவினரையும் திண்டிவனம் நீதிமன்றம் விடுதலை செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த கலவரம் என்பது பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலாகும். இதில் பாமகவின் அப்பாவி தொண்டர்கள் இருவர் கொல்லப்பட்டனர். ஆனால் திட்டமிட்டு பாமகவினர் மீது பொய் வழக்குகள் புனையப்பட்டன.
நீதி வென்றது
வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாமக முன்னாள் மாவட்ட செயலாளர்கள் கலையரசன், சசிக்குமார் உள்ளிட்ட 20 பேரும் இப்போது விடுதலை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நீதி வென்றுள்ளது. இதே வன்முறையில் பாமகவினரின் படுகொலைக்கு காரணமானவர்கள் இதே நீதிமன்றத்தால் ஏற்கனவே தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்த இரு தீர்ப்புகளில் இருந்தே மரக்காணம் கலவரத்துக்கு யார் காரணம் என்பது தெளிவாக புரியும். திண்டிவனம் இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் உண்மைகளை எடுத்து வைத்து வாதாடி நீதியை நிலைநாட்ட உதவிய பாமக வழக்கறிஞர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்'' என குறிப்பிட்டுள்ளார்.