குழந்தைக்கு ‘உதயநிதி’ என பெயர் சூட்டிய அமைச்சர்.. வருங்கால முதல்வர் பேரை வச்சிருக்கேன்! உற்சாகம்!
விழுப்புரம் : அமைச்சர் செஞ்சி மஸ்தான், இன்று ஒரு குழந்தைக்கு 'உதயநிதி' என பெயர் சூட்டியுள்ளார்.
பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் செஞ்சி மஸ்தான்.
அப்போது, திண்டிவனத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், இன்று குழந்தை பெற்ற தம்பதியர், தங்கள் குழந்தைக்கு அமைச்சர் பெயர் வைக்க வேண்டும் எனக் கோரினர்.
இதையடுத்து, அந்தக் குழந்தைக்கு குழந்தைக்கு உதயநிதி பெயரை சூட்டிய அமைச்சர் மஸ்தான், வருங்கால முதல்வரின் பெயரை சூட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆய்வு
தமிழக சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் இன்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்ட வரும் புதிய கட்டிடப் பணிகள் ஆகியவற்றை இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மருத்துவர்களிடம்
இந்த ஆய்வின் போது பருவமழை காலத்தில், பொதுமக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள், தொற்றுக் காய்ச்சல்கள் ஏற்படும், அவை அனைத்தையும் கையாள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் அமைச்சர் செஞ்சி மஸ்தான். மேலும் புதிய கட்டிடப் பணிகளை துரிதப்படுத்தவும், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அமைச்சரிடம் கேட்ட பெற்றோர்
திண்டிவனம் அரசு மருத்துவமனையில், திண்டிவனம் டி.நகர் பகுதியில் வசிக்கும் திமுகவைச் சேர்ந்த சண்முகம்-சுமித்ரா தம்பதியருக்கு, இன்று காலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. அமைச்சர் மஸ்தான் அங்கு வந்ததை அறிந்து, அந்தக் குழந்தைக்கு நீங்கள் தான் பெயர் வைக்க வேண்டும் என அமைச்சரிடம் குழந்தையின் பெற்றோர் விரும்பிக் கேட்டனர்.

குழந்தைக்கு உதயநிதி பெயர்
இதையடுத்து, அந்தக் குழந்தைக்கு 'உதயநிதி' எனப் பெயர் சூட்டினார் அமைச்சர் செஞ்சி மஸ்தான். மேலும், வருங்கால முதல்வரின் பெயரை குழந்தைக்கு சூட்டி உள்ளதாகவும் தெரிவித்தார். அமைச்சர் மஸ்தான், குழந்தைக்கு 'உதயநிதி' என பெயர் சூட்டியதும் அங்கு கூடியிருந்தவர்கள் உற்சாக ஆரவாரம் செய்தனர்.

உதயநிதிக்கு முக்கியத்துவம்
திமுக இளைஞரணி செயலாளராகவும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவாகவும் இருக்கும் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என அமைச்சர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். பின்னர், உதயநிதியே, இதுதொடர்பாக தலைமைக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டதால் அந்தப் பேச்சுகள் தவிர்க்கப்பட்டன. எனினும், கட்சியில் உதயநிதி ஸ்டாலினுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், அவரது பெயரை குழந்தைக்குச் சூட்டியுள்ளார் அமைச்சர் மஸ்தான்.

பெயர்கள்
திமுக தலைவர்கள் பல்லாண்டு காலமாகவே, பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது, பொதுமக்களின் விருப்பத்திற்கிணங்க அவர்களின் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவது வழக்கம். நல்ல தமிழ்ப் பெயர்களையும், திமுக தலைவர்களின் பெயர்களையும் சூட்டுவார்கள். அந்தவகையில், பலருக்கு அண்ணாதுரை, கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்ட பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. பின்னாளில் அவர்கள் கட்சியில் உயரங்களையும் தொட்டுள்ளனர். இந்நிலையில், உதயநிதியின் பெயரை குழந்தைக்குச் சூட்டியுள்ளார் அமைச்சர் மஸ்தான்.












Click it and Unblock the Notifications