பொங்கல் விழாவுக்காக தயாராகும் தைலாபுரம் தோட்டம்! அசத்தலான அலங்காரப் பணிகள் ஜரூர்!
விழுப்புரம்: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஒட்டி பட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸின் இல்லம் அமைந்துள்ள தைலாபுரம் தோட்டம் திருவிழாக் கோலம் பூண்டிருக்கிறது.
ஆண்டு தோறும் ஒவ்வொரு தீம்களில் கரும்பை கொண்டு அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்படுவது தைலாபுரம் தோட்டத்தின் வழக்கம்.
அதேபோல் ராமதாஸின் குடும்ப உறவுகள் அனைத்தும் ஒன்றாக சங்கமித்து அவரிடம் பொங்கல் வாழ்த்து பெறுவதும் வழக்கமான ஒன்றாகும்.

பொங்கல் விழா
தீபாவளி, ஆங்கில புத்தாண்டு உட்பட மற்ற பண்டிகைகளை காட்டிலும் பொங்கல் பண்டிகையை மட்டுமே பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார் பாமக நிறுவனர் ராமதாஸ். வீட்டுப்பொங்கல், மாட்டுப்பொங்கல் என இரண்டு நாட்களும் தைலாபுரம் தோட்டம் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். குடும்ப உறவினர்கள் மட்டுமல்லாது பாமகவின் முக்கிய நிர்வாகிகளும் ராமதாஸை சந்தித்து தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு வாழ்த்துப்பெற்று மகிழ்வார்கள்.

ஆண்டுதோறும் அலங்காரம்
இதனால் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது வித்தியாசமான முறையில் கரும்பு கட்டுக்களை கொண்டு வெவ்வேறு தீம்களில் அலங்காரங்கள் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் கரும்புகளை கொண்டு பொங்கல் பானை, குடில், மாட்டு வண்டி, உள்ளிட்ட அலங்காரப் பணிகள் செய்யப்பட்டிருந்தன. இதனிடையே இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு தைலாபுரம் தோட்டத்தில் எது மாதிரியான அலங்காரங்கள் கரும்பைக் கொண்டு செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு பாமகவினருக்கு ஏற்பட்டுள்ளது.

பேரன் பேத்திகள்
மற்ற நாட்களில் எல்லாம் கட்சிப் பணிகள் காரணமாக நிற்க நேரமில்லாமல் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ராமதாஸ், பொங்கல் வந்துவிட்டால் வீட்டுப்பொங்கல், மாட்டுப்பொங்கல் 2 நாட்களுக்கும் முழுக்க முழுக்க சொந்த பந்தங்களுடன் நேரம் செலவிட்டு பேரன் பேத்திகளுடன் பொழுதை கழிப்பார். ராமதாஸிடம் பொங்கல் வாழ்த்து பெறுவதற்காகவே அத்தனை சொந்தத்தினரும் தைலாபுரத்தில் ஆஜராகிவிடுவார்கள்.

முதல் வாழ்த்து
அதேபோல் பொங்கல் பண்டிகைக்கான வாழ்த்தும் ராமதாஸிடம் இருந்து தான் முதலில் வெளியாகும். இதனிடையே கொரோனா பரவலுக்கு முன்னர் தைலாபுரம் பகுதியில் உள்ள பல கிராமங்களுக்கு சென்று பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்று அன்புமணி ராமதாஸ் பரிசுகள் கொடுத்து மகிழ்வார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications