கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு! ஜிப்மர் ஆய்வறிக்கையை பெற்றோரிடம் தர முடியாது! நீதிமன்றம் அதிரடி!
விழுப்புரம் : கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக ஜிப்மர் மருத்துவ குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையை பெற்றோர் தரப்பிடம் ஒப்படைக்க முடியாது என விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி வளாகத்தில் மாடியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் கீழே விழுந்து உயிரிழந்தார்.
இதனை அடுத்து அங்கு பெரும் கலவரம் வெடித்தது. மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் பள்ளிக்குள் புகுந்து அங்கு இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதோடு பேருந்துகளுக்கும் தீ வைத்தனர்.
கள்ளக்குறிச்சி வன்முறை: சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டோருக்கு இழப்பீடு கோரும் வழக்கு தள்ளுபடி
கள்ளக்குறிச்சி மாணவி
கலவரத்தை கட்டுப்படுத்த முயன்ற காவல்துறையினர் பலரும் இந்த கல்வீச்சில் காயம் அடைந்த நிலையில் கலவர காட்சிகள் தமிழகம் முழுவதும் வரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. பள்ளி மாணவி ஜூலை மாதம் 13ஆம் தேதி உயிரிழந்த நிலையில் அவரது உடலானது இரண்டு முறை உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதை அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி பெற்றோர் அவரது உடலை பெற்று சொந்த ஊரில் அடக்கம் செய்தனர்.
தாயார் கோரிக்கை
இந்த நிலையில் மாணவி மரணத்தில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது என பெற்றோர் நீதிமன்றத்தில் கூறிய நிலையில் மாணவியின் உடற்கூறு ஆய்வினை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அறிக்கையை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஜிப்மர் மருத்துவ குழுவுக்கு உத்தரவிட்டிருந்தது. இதை அடுத்து மாணவியின் இரண்டு உடற்கூறு ஆய்வு முடிவுகளையும் ஆய்வு செய்த ஜிப்மர் மருத்துவ குழுவினர் உடற்கூறு ஆய்வு குறித்த அறிக்கையை விழுப்புரம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இந்த நிலையில் மாணவியின் உடலை உடற்கூறு ஆய்வு செய்த முதல் இரண்டு அறிக்கைகள் ஜிப்மர் மருத்துவ குழு வழங்கிய உடற்கூறு ஆய்வு அறிக்கை சிபிசிஐடி போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை நகல் உள்ளிட்டவற்றை தங்களுக்கு வழங்க வேண்டும் என மாணவியின் தாயார் விழுப்புரம் தலைமை குற்றவையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்றம் மறுப்பு
இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி மாணவியின் உடற்கூறு ஆய்வறிக்கைகள் மற்றும் ஜிப்மர் மருத்துவக் குழுவின் அறிக்கை குறித்த நகல்களை நாளை (இன்று) வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் மாணவியின் தாயார் தரப்பில் கோரிக்கை வைத்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற மாணவியின் இரண்டு உடற்கூறு ஆய்வு அறிக்கைகளும் சிபிசிஐடி போலீசாரின் முதல் தகவல் அறிக்கையை நகலும் விழுப்புரம் நீதிமன்றம் மூலம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஜிப்மர் மருத்துவக் குழுவினர் அளித்த உடற்கூறு ஆய்வறிக்கையினை அளிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டதாக மாணவியின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
வழக்கறிஞர் பேட்டி
இதுகுறித்து நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளிடம் பேசிய மாணவியின் தரப்பு வழக்கறிஞர் காசி விஸ்வநாதன்," மாணவியின் உடற்கூறு அறிக்கைகள், ஜிப்மர் மருத்துவ அறிக்கை உள்ளிட்டவற்றை கேட்டிருந்தோம். ஆனால் மாணவியின் இரண்டு உடற்கூறு ஆய்வறிக்கைகள், சிபிசிஐடி போலீசாரின் முதல் தகவல் அறிக்கை நகல் ஆகியவற்றை மட்டும் விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் வழங்கி உள்ளது. ஆனால் ஜிப்மர் அறிக்கையை தர முடியாது என்று கூறியுள்ளதாகவும் விசாரணை நிலுவையில் உள்ளதால் ஜிப்மர் ஆய்வு அறிக்கையை தர நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அப்படி உங்களுக்கு ஜிப்மர் மருத்துவ குழுவின் அறிக்க வேண்டுமென்றால் நீங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து பெற்றுக்கொள்ளலாம் "என கூறியதாக கூறியுள்ளார்.