மரக்காணத்தில் ஊரடங்கால் உப்பு உற்பத்தி நிறுத்தம்.. 3500 தொழிலாளர்கள் வேலையிழப்பு
விழுப்புரம்: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உப்பளத்தில் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளளதால் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த 51 வயதான தலைமை ஆசிரியர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் டெல்லியை சேர்ந்த நிதின் ஷர்மா என்ற இளைஞருக்கு கொரோனா வைரஸ்
தொற்று உறுதியான நிலையில், கடந்த 7 ஆம் தேதி மருத்துவர்களின் அலட்சியத்தால் விடுவிக்கப்பட்டார்.

இதனையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விழுப்புரம் மாவட்ட போலீஸார் 7 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வெளியே கூட்டமாக கூடுவதை தடுக்க, பொதுமக்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் வீட்டை விட்டு வெளியே வரும் திட்டம் நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

ஊரடங்கால் நாடு முழுவதும் பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளது. இதனால் பெரும்பாலானோர் வேலையிழந்து, தங்களுடைய அத்தியாவசிய தேவைகளைக்கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் அவதியுற்று வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில்தான் அதிகளவு உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. மரக்காணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான 3500 ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளது. இந்த உப்பளங்களில் இருந்து ஆண்டு தோறும் சுமார் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்து புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் துவங்கும் உப்பு உற்பத்தி தொடர்ந்து அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் வரையில் நடைபெறும். இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் உப்பு அனைத்தும் உணவுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த உப்பு உற்பத்தி வெயில் காலத்தில்தான் சிறப்பாக இருக்கும். ஊரடங்கால், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் உப்பளத்தில் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளளதால் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட உப்பு குவியல், குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. லாரிகள் ஓடாததால் அதனை வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லமுடியவில்லை. உப்பளத்தில் இருந்து வரப்புகளில் சேமித்து வைக்கப்பட்ட உப்பை அள்ளவும் தொழிலாளர்கள் இல்லை. இதனால் உப்பள வரப்புகளில் உப்பு தேக்கி வைக்கப்பட்டுள்ளது. மரக்காணம் பகுதியில் உள்ள உப்பளங்களில் 50 ஆயிரம் டன்னுக்கு மேல் உப்பு தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கால் வேலையிழந்துள்ள உப்பளம் தொழிலாளர்கள் கூறுகையில், நாங்கள் முழுக்க, முழுக்க உப்பு உற்பத்தி தொழிலையே நம்பி இருக்கிறோம். தினமும் வேலைக்கு சென்று கிடைக்கும் கூலியை வைத்துதான் குடும்பத்தை நடத்தி வருகிறோம். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் 18 நாட்களாக வேலைக்கு செல்லவில்லை. இதனால் எங்களது வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கி உள்ளது. அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறோம். எனவே ஊரடங்கு முடியும் வரை எங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிவாரண தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.













Click it and Unblock the Notifications