டயர் வெடித்ததால்.. ஆட்டோ மீது லாரி மோதி விபத்து.. பெண் உள்பட 4 பேர் பலி..திண்டிவனம் அருகே சோகம்
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே திருவண்ணாமலை நோக்கி சென்றுகொண்டிருந்த லாரி ஒன்று ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே திருவண்ணாமலை நோக்கி சென்றுகொண்டிருந்த லாரி ஒன்று ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த பெண் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சாலையில் சென்றுகொண்டிருந்த லாரியின் டயர் வெடித்ததால் இந்த விபத்து நடந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

திண்டிவனத்தில் இருந்து திருவண்னாமலை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி, சாலை என்ற ஊரைக் கடக்கும் போது லாரியின் முன் பக்க டயர் வெடித்தது. இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய லாரி எதிரே வந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. லாரிய மோதிய வேகத்தில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் லாரியும் கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த பெண் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஒருவர் மட்டும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. பரபரப்பான சாலையில் நடைபெற்ற இந்த விபத்து காரணமாக போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. லாரி மோதி ஆட்டோவில் பயணம் செய்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications