'விசில் அடிச்சான் குஞ்சு' என சொல்லிடக் கூடாது.. தொண்டர்களுக்கு விஜய் அட்வைஸ்
விழுப்புரம்: தவெக மாநாடு இன்று சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. மாநாட்டில் தொண்டர்களுக்கு விஜய் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். குறிப்பாக, 'விசில் அடிச்சான் குஞ்சு' என நம்மை யாரும் சொல்லிடக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.
விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்கிற அரசியல் கட்சியை அறிவித்ததிலிருந்து கட்சியின் கொள்கை, கோட்பாடுகள் என்ன? வழிக்காட்டி யார்? செயல் திட்டம் என்ன? என்பது போன்ற பல கேள்விகள் எழுந்தன. இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதிலாகவே இன்று விக்கிரவாண்டியில் விஜய் தனது முதல் மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறார். மாநாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மாநாட்டில் கட்சியின் கொள்கைகளை விஜய் அறிவித்தார். அதாவது மதச்சார்பற்ற, சமூகநீதிதான் தவெகவின் கொள்கை என கூறினார்.

மேலும், மதம், சாதி, பாலினம், பொருளாதாரம் என பிளவுப்படுத்தாமல் பிறப்பால் அனைவரும் சமமே, எல்லா நிலைகளிலும் ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள் சமம், மாநில தன்னாட்சி உரிமை என்பது அந்தந்த மாநிலங்களின் சுயாட்சி உரிமை, தமிழ் மொழியில் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை, இருமொழிக்கொள்கை, வர்ணாசிரம கோட்பாடு எந்த வகையில் வந்தாலும் எதிர்ப்போம், ஆளுநருக்கு எதிர்ப்பு ஆகியவை தங்கள் அரசியல் கோட்பாடு என்று கூறியிருந்தார். இவை அனைத்துமே தற்போது ஆட்சியில் உள்ள திமுக+அதன் கூட்டணி கட்சிகளின் கொள்கைகளாக அறியப்படுகிறது.
அதேநேரம் தனது அரசியல் வழிக்காட்டியையும் விஜய் இந்த மாநாட்டில் அடையாளம் காட்டியுள்ளார். அதன்படி பெரியார், அம்பேத்கர், அஞ்சலை அம்மாள், காமராஜர் மற்றும் வேலுநாச்சியார் ஆகியோரை விஜய், தவெகவின் வழிக்காட்டியாக குறிப்பிட்டிருக்கிறார். பெரியாரை பொறுத்தவரை சமத்துவம், முற்போக்கு மற்றும் பெண் கல்வி ஆகியவற்றிற்காக வழிக்காட்டியாக ஏற்றிருப்பதாக கூறியுள்ளார். இதில், கடவுள் மறுப்பு கொள்கையுடன் தவெக முரண்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
அம்பேத்கரை அரசியலமைப்பு சட்டத்திற்காகவும், சம உரிமைக்காகவும் வழிக்காட்டியாக ஏற்றிருப்பதாகவும், காமராஜரை சிறந்த நிர்வாகத்திற்காகவும், அஞ்சலை அம்மாளையும், வேலுநாச்சியாரையும் பெண்கள் முன்னேற்றம் மற்றும் விடுதலை போராட்ட உணர்வு ஆகியவற்றிலிருந்து வழிக்காட்டியாக ஏற்றிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
எல்லோரையும் போலவே தானும் சினிமாவில் சம்பாதித்துவிட்டு, ஒதுங்கிவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்ததாகவும், ஆனால் தான் மட்டும் நன்றாக இருந்தால் போதாது அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அரசியலில் நுழைந்திருப்பதாகவும் விஜய் கூறியுள்ளார். அரசியல் எதிரியாக ஊழல் அரசாங்கத்தையும், பிளவுவாத அரசையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
விஜய் மாநாட்டில் பங்கேற்ற இளைஞர்கள் அரசியல் புரிதல் அற்றவர்கள் என்று பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் தொடக்கத்திலிருந்தே எழுந்திருந்தன. இதற்கு மாநாட்டில் பதிலளித்துள்ள விஜய், நம்மை யாரும் இனி விசிலடிச்சான் குஞ்சுகள் என்று சொல்லிவிடக்கூடாது என தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், "நம்மை' வேகமானவர்கள் விவேகமானவர்கள்' என பாராட்டும் வகையில் கொள்கை கோட்பாடுகளை மனதில் ஏந்தி செயல்பட வேண்டும்" எனவும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications