விருதுநகரில் தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. ஒருவர் பலி, இருவர் படுகாயம்!
விருதுநகர்: விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
விருதுநகர் அருகே நாட்டார் மங்கலம் பகுதியில் செல்வகுமார் என்பவருக்குச் சொந்தமான பொம்மி பட்டாசு ஆலை இயங்கி வருகிறது
இந்நிலையில் மாலை வழக்கமான பட்டாசு தயாரிக்கும் பணிகள் பணிகள் முடிந்த பிறகு, மீதம் உள்ள கழிவுகளை எரிக்கும் பணியில் அதே பட்டாசு ஆலையில் பணிபுரியும் ஆறுமுகம், தெய்வேந்திரன், குபேந்திரன் ஆகிய 3 பேர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது யாரும் எதிர்பாராதவிதமாக அங்கிருந்த பட்டாசுகளில் ஏற்பட்ட உராய்வினால் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் ஆறுமுகம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், தெய்வேந்திரன் மற்றும் குபேந்திரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டதும், அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பாகத் தகவல் கிடைத்ததும், விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த தெய்வேந்திரன் என்பவர் விருதுநகர் அரசு மருத்துவமனையிலும், குபேந்திரன் என்பவர் சிவகாசி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு - 4 பேருக்கு தீவிர சிகிச்சை
நல்வாய்ப்பாக மாலை நேரம் என்பதால் இந்த ஆலையில் பணிபுரிந்த பெரும்பாலான தொழிலாளர்கள் வீடு திரும்பிவிட்டனர். இதனால் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
இந்த பட்டாசு விபத்து குறித்து ஆமத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.