கன மழை எச்சரிக்கை.. சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதியில்லை..பக்தர்கள் ஏமாற்றம்
விருதுநகர்: மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம், அமாவாசை நாட்களில் சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மலையேற வனத்துறை தடை விதித்துள்ளதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட கிழக்கு பருவமழை தமிழகத்தில் பல மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
மிக கனமழை எச்சரிக்கை காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்லவும் மலையேறி சாமி தரிசனம் செய்யவும் பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சதுரகிரி மலை
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் சென்று வழிபட பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட மாதத்தின் 8 நாள்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. புரட்டாசி மாத அமாவாசை, பவுர்ணமி, நவராத்திரி நாட்களில் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபட அனுமதி அளிக்கப்பட்டது.

ஓடைகளில் வெள்ளம்
கடந்த மாதம் ஐப்பசி அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பலத்த மழை பெய்ததால் சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த மாதமும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி மறுத்துள்ளது.

வனத்துறை அறிவிப்பு
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,இன்று முதல் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் வருகிற 23ஆம் தேதி கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம் அமாவாசையையொட்டி பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தாணிப்பாறை, வழுக்குப்பாறை, சங்கிலிப்பாறை ஆகிய ஆற்றுப் பகுதிகளில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதாலும், பக்தர்கள் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது.

பக்தர்கள் ஏமாற்றம்
கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு, நாளை முதல் வருகிற 24ஆம் தேதி வரை மலை அடிவாரத்துக்கோ, கோவிலுக்கு தரிசனம் செய்யவோ பக்தர்கள் வர வேண்டாம். அதேநேரம் கோவிலில் பிரதோஷம், அமாவாசை பூஜைகள் வழக்கம் போல் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினரின் அறிவிப்பால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications