ஈரக்குலையே நடுங்கிருச்சு.. சதுரகிரி மலையில் குபுகுபுன்னு எரிந்த காட்டுத்தீ.. 3,000 பக்தர்கள் தவிப்பு
விருதுநகர்: சதுரகிரி மலையில் ஏற்பட்டு இருக்கும் பெரும் காட்டுத் தீ காரணமாக கோயிலுக்கு சென்ற 3000 க்கும் அதிகமான பக்தர்கள் சிக்கத் தவிக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியை அடுத்து உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது சதுரகிரி. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5 ஆயிரம் அடி உயரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் இந்த சதுரகிரி மலை அமைந்து உள்ளது.

இங்குள்ள சுந்தரமகாலிங்கம் மற்றும் சந்தனமகாலிங்கம் கோயில்களுக்கு அமாவாசையை முன்னிட்டு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் கோயிலுக்கு செல்லும் மலைப் பாதையில் நேற்று மாலை 6 மணியளவில் திடீரென பெரும் காட்டுத் தீ பரவியது.
இந்த காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினருடன் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு கருதி பக்தர்கள் மலையில் இருந்து கீழே இறங்கவும் வனத்துறை தடை விதித்து இருக்கிறது. இதன் காரணமாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கீழே இறங்க முடியாமல் சிக்கித் தவித்து வருகிறார்கள். அவர்கள் கோயிலிலேயே தங்க வைக்கப்பட்டு உள்ளார்கள்.
இந்த காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தீ விபத்தால் பக்தர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரம் தீயை முழுமையாக அணைத்த பிறகு சதுரகிரி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட பகுதி மதுரை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட சாப்டூர் பீட் நம்பர் 5 என்ற வனப்பகுதி என்று கூறப்படுகிறது. மலை உச்சியில் ஏற்பட்ட காட்டுத்தீயை மலை அடிவாரத்தில் இருந்த பக்தர்களும் பார்த்ததாக தெரிவித்து உள்ளார்கள். சதுரகிரி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த இரு மாதங்களாக மலை இல்லாததாலேயே இந்த காட்டுத்தீ ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மழை இல்லாததால் காரணத்தால் காட்டாறுகள், ஓடைகளில் நீர்வரத்து இன்றி இந்த வனப்பகுதி முழுவதும் வறண்டு காணப்பட்டது. மலைப்பகுதியில் வீசிய பலத்த காற்றால் இலைகள், மூங்கில்கள் உரசி தீப்பற்றி இருக்கலாம் காட்டுத் தீ வேகமாக பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மாலை 6 மணியளவில் காட்டுத் தீ ஏற்படுவதற்கு முன்பே பக்தர்கள் பலர் மலை அடிவாரத்துக்கு சென்று விட்டதாகவும், இதனால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாகவும் பக்தர்கள் தெரிவித்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications