ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளம் குளத்து நீரில் மூழ்கி அடையாளம் தெரியாத தாய் மகள் பலி-போலீஸ் விசாரணை
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் நீராடியதாக போற்றப்படும் திருமுக்குளத்து நீரில் மூழ்கி தாயும் மகளும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் இருவரும் இறந்தது எப்படி தற்கொலை செய்து கொண்டார்களா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது திருமுக்குளம். பழமை வாய்ந்த இந்த குளத்தில் இருந்து தான் ஆண்டாளுக்கு திருமஞ்சனத்துக்கு நீர் எடுத்து செல்வது வழக்கம்.
இந்த குளம் நிறைந்துவிட்டால் இந்த பகுதி மக்கள் அதில் நீராடுவது வழக்கம். மேலும் நகர் பகுதியில் இதன் மூலம் மக்கள் பயன்படுத்துவதற்கு நீர் கிடைத்து வந்தது. மேலும் இந்த குளத்தில் பங்குனி மாதம் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெறும்.
திருமுக்குளத்தின் உள்ளே ஒன்றுக்குள் ஒன்றாக மூன்று குளங்கள் உள்ளன. நீர் முழுதுவதும் வற்றினால் பார்க்க முடியும். கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் இருப்பதாக மக்களிடையே நம்பிக்கை. இது நான்கு பக்கங்கள் கொண்ட மிகப்பெரிய குளம். கீழ்பக்கக்கரையில் 'தீர்த்தவாரி மண்டபம்' அமைந்துள்ளது.
ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திருமுக்குளம். இதில் தினந்தோறும் ஏராளமானோர் துணி துவைப்பது. குளிப்பது போன்றவற்றிற்கு பயன்படுத்தி வருகின்றனர். கீழ்கரையில் மக்கள் குளிப்பதற்கு 8 படித்துறைகள் இருக்கின்றன. இந்தக்குளம் எல்லாத் தரப்பு மக்களும் குளிப்பதற்கும் அனைவரும் நீச்சல் பழகுவதற்கும் உபயோகமாக இருக்கிறது.
குளத்தின் நடுவில் மண்டபம் இருக்கிறது. குளத்தின் மேற்கு கரையில் குளிப்பதற்கு 1 படித்துறை தான் இருக்கிறது. ஆண்டாள் நீராட்டு மண்டபம் சிறப்பாக அமைந்திருக்கிறது. இதில் ஆண்டாள் நீராட்டு உற்சவம் மார்கழி மாதம் நடைபெறும். தை மாதப்பிறப்பன்று திருவிழா நிறைவு பெறும். ஆண்டாள் நீராடிய திருமுக்குளம் விரைவில் சீரமைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்.
தென்மேற்குப் பருவமழையால் திருமுக்குளம் நீர் நிறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை பொதுமக்கள் குளத்திற்கு சென்ற போது குளத்தில் அடையாளம் தெரியாத இரண்டு பெண் சடலம் மிதந்துள்ளது.இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த போலீசார் குளத்தில் விழுந்து கிடந்த இரண்டு பெண்கள் சடலத்தை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் குளத்தில் நீரில் மூழ்கி அடையாளம் தெரியாத இரண்டு பெண்கள் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி இறந்தார்களா ? இல்லை தற்கொலை செய்து கொண்டார்களா? இவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்ற பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.