சிவகாசியில் பற்ற வைத்த துரை வைகோ.. அதிர்ச்சியில் கதர் தலைகள்.. அதிருப்தியில் மாணிக்கம் தாகூர் எம்பி!
விருதுநகர்: மதிமுக தலைமை நிலைய கழகச் செயலாளர் துரை வைகோவின் பேச்சு விருதுநகர் காங்கிரஸ் தலைவர்களிடையே அதிருப்தி ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
சிவகாசியில் மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தலைமை நிலைய கழகச் செயலாளர் துரை வைகோ பேசியதாவது: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட எங்களுக்கு ஸ்டாலின் வாய்ப்பு தர வேண்டும்.
வைகோ எம்பி ஆக இருந்த போது விருதுநகருக்கு பல்வேறு திட்டங்களை எல்லாம் கொண்டு வந்திருக்கிறார். அது போல் நானும் செயல்பட வாய்ப்புத் தர வேண்டும் என பேசியிருந்தார்.
ஏதோ என்னால முடிஞ்சத செய்றேன்.. நான் என்ன எம்பியா..எம்எல்ஏவா? ஓபானாகப் பேசிய மதிமுக துரை வைகோ!
6 சட்டசபை தொகுதி
திருப்பரங்குன்றம், திருமங்கலம், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய 6 சட்டசபை தொகுதிகளை கொண்டது விருதுநகர் லோக்சபா தொகுதியாகும். இந்த தொகுதி காங்கிரஸின் கோட்டை என சொல்லும் அளவுக்கு அக்கட்சிக்கு செல்வாக்கு அதிகமாக இருக்கிறது.
காங்கிரஸ் கட்சி
2009 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்கம் தாகூர் எம்பியாக தேர்வானார். இதற்கு அடுத்து 2014 ஆம் ஆண்டு அதிமுகவின் ராதாகிருஷ்ணன் வென்றார். மீண்டும் கடந்த 2019ஆம் ஆண்டு மாணிக்கம் தாகூரே போட்டியிட்டு வென்றுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டும் 2014 ஆம் ஆண்டும் மதிமுகவின் வைகோ போட்டியிட்டு இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.
காங்கிரஸின் கோட்டை
தொடர்ந்து விருதுநகர் காங்கிரஸின் கோட்டையாக இருந்து வரும் நிலையில் துரை வைகோ அந்த தொகுதியில் மதிமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என கூறியிருப்பது விருதுநகர் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் இந்த செய்தியை கேட்டு மாணிக்கம் தாகூர் கடும் அதிருப்தியில் இருக்கிறாராம்.
காங்கிரஸும் மதிமுகவும்
ஒரே தொகுதிக்கு காங்கிரஸும் மதிமுகவும் தற்போதே போட்டி போடும் நிலை ஏற்பட்டுவிட்டதால் தேர்தல் நேரத்தில் தொகுதி பங்கீடு சமயத்தில் திமுக கூட்டணியில் நிச்சயம் குழப்பம் வரும் என்றே தெரிகிறது. விருதுநகர் தொகுதியின் எம்பி மாணிக்கம் தாகூர். இவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர். டெல்லியில் சொந்த கட்சிக்காக மட்டுமின்றி திமுகவுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
எய்ம்ஸ் மருத்துவமனை
மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் தனது ட்வீட் மூலம் டெல்லி வரை பெரும் புயலை கிளப்பியிருந்தார். விருதுநகர் தொகுதிக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகிறார். தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதி என தெரிந்தும் விருதுநகர் தொகுதியை துரை வைகோ கேட்டுள்ளார். வைகோ மீது மரியாதை வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் விருதுநகர் தொகுதியை மதிமுகவுக்கு ஒதுக்கிவிட்டால் என்ன செய்வது என்பதால் மாணிக்கம் தாகூர் இது தொடர்பாக ராகுல் காந்தியிடம் பேச போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென் மாவட்டங்கள்
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு இருக்கிறது. ஏற்கெனவே மற்ற மாநிலங்களில் கட்சியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அப்படியிருக்கும் போது தமிழகத்தில் கொஞ்சம் நஞ்சம் இருக்கும் செல்வாக்கையும் தட்டி பறிக்கும் விதமாக கூட்டணி கட்சிகள் இருந்தால் என்ன செய்வது என கதர்கள் இப்போதே கதறுகிறார்களாம்.
அதிருப்தி
இதுகுறித்து மதிமுக வட்டாரத்தில் கேட்ட போது வாரிசு அரசியலை எதிர்த்தவர் வைகோ. ஆனால் அவரது கட்சியிலேயே அவரது மகனுக்கு முக்கிய பதவியான தலைமை நிலைய செயலாளர் பதவியை கொடுத்துள்ளார். இதற்கு மூத்த நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து மாற்று கட்சிகளில் இணைந்து விட்டனர். இந்த நிலையில் லோக்சபா தொகுதி தேர்தலில் தான்தான் வேட்பாளர் என துரை வைகோ சொல்லாமல் சொல்லியுள்ளது, மூத்த தலைவர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் ஓரிரு இடங்கள் மட்டுமே மதிமுகவுக்கு ஒதுக்கப்படும், அப்படியிருக்கும் போது அதையும் துரை வைகோவே எடுத்து கொண்டால் எப்படி என்ற கேள்வியும் எழுகிறது என மதிமுக நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.