"ஆபத்தான நிகழ்வு!" வெறும் 3 நாட்களில்.. பூமிக்கு மிக அருகே வரும் ஆஸ்டிராய்டு! வார்னிங் தரும் நாசா
வாஷிங்டன்: பூமியை நோக்கி வரும் மிகப் பெரிய ஆஸ்டிராய்டு ஒன்று குறித்து அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆஸ்டிராய்டுகள் எனப்படும் சிறுகோள்கள் நமது விண்வெளியில் தொடர்ந்து சுற்றிக் கொண்டே இருக்கும். பெரும்பாலும் இதுபோன்ற ஆஸ்டிராய்டுகளால் பூமிக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படாது.
சில சமயங்களில் மட்டும் இந்த ஆஸ்டிராய்டுகள் பூமியின் சுற்றுவட்டார பாதையில் நுழையும். இருப்பினும், அவை பூமியை அடையும் முன்னரே அதிக வெப்பத்தில் எரிந்து சாம்பல் ஆகிவிடும்.
பெரிய ஆஸ்டிராய்டு
இந்தச் சூழலில் மிகப் பெரிய ஆஸ்டிராய்டு ஒன்று பூமிக்கு மிக அருகே வர உள்ளதாக அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆஸ்டிராய்டு 388945 (2008 TZ3) என்று அழைக்கப்படும் இந்த சிறுகோள் மே 16 அன்று அதிகாலை 2.48 மணிக்கு நமது கிரகத்தை நெருங்கி வருகிறது. இந்த சிறுகோள் 1,608 அடி அகலம் கொண்டது என நாசா தெரிவித்துள்ளது. ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால் நியூயார்க்கின் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் 1,454 அடி உயரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இது ஈபிள் கோபுரம், லிபர்ட்டி சிலையை விட பெரியதாகும்.
மோசமான சேதம்
இந்த சிறுகோள் மட்டும் பூமியைத் தாக்கினால் அது மிக மோசமான சேதத்தை ஏற்படுத்தும். ஆனால் இந்த சிறுகோள் பூமியில் இருந்து சுமார் 2.5 மில்லியன் மைல் தொலைவில் நம்மைப் பாதுகாப்பாகக் கடந்து செல்லும் என்று நாசா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 2.5 மில்லியன் மைல் என்பது நமக்குக் கேட்க மிகவும் தொலைவான தூரம் என்பதைப் போலத் தோன்றினாலும், விண்வெளியில் இது மிகவும் நெருக்கமான தூரம் தான். அதனால்தான், நாசா இதை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
எவ்வளவு தூரம்
அதேநேரம் இந்த ஆஸ்டிராய்டு 388945 பூமிக்கு அருகே வருவது இது முதல்முறை இல்லை. கடந்த மே 2020இல் இதே ஆஸ்டிராய்டு 388945 பூமிக்கு மிக அருகில் - 1.7 மில்லியன் மைல் தொலைவில் கடந்து சென்று இருந்தது இந்த ஆஸ்டிராய்டு ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமியைக் கடந்து செல்லும். ஆனால், அனைத்து சமயங்களிலும் இவ்வளவு நெருக்கமான தொலைவில் செல்லாது. அடுத்து, இந்த ஆஸ்டிராய்டு மே 2024இல் பூமியில் இருந்து 6.9 மில்லியன் மைல் தொலையில் கடந்து செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அபாயம்
ஒரு சிறுகோள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பெரியதாக இருந்து, அது பூமியில் இருந்து 4.65 மில்லியன் மைல்களுக்குள் வந்தால் அதை நாசா ஆய்வாளர்கள் அபாயகரமானதாகக் கருதுகின்றனர். பெருவெடிப்பு போன்ற நிகழ்வுகள் நடைபெறும் சமயத்தில் ஒரு கிரகத்தில் இருந்து சிதறுபவை தான் இதுபோன்ற சிறுகோள்கள் ஆகும். இந்த சிறுகோள்கள் எல்லையற்ற விண்வெளியில் சுழன்று கொண்டே இருக்கும். சில பெரிய ஆஸ்டிராய்டுகளால் பூமிக்கு ஆபத்து என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்தும் வருகின்றனர்.
Recommended Video
நாசா திட்டம்
இதன் காரணமாக நாசா உட்பட பல விண்வெளி ஆஸ்டிராய்டுகளில் இருந்து பூமியைப் பாதுகாக்க ஒரு திட்டத்தை வகுத்து வருகின்றன. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, நாசா DART என்ற திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. பூமியை நோக்கி வரும் ஆபத்தான சிறுகோள்கள் மீது DART மோதி, அதைத் திசைதிருப்பும். இருப்பினும், இதுவரை எந்தவொரு ஆஸ்டிராய்டும் பூமியை நோக்கி வரவில்லை.