6 மாதமாக நீடிக்கும் போர்.. ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் இத்தனை அப்பாவி மக்கள் பலியா?.. பகீர் தகவல்!
வாஷிங்டன்: கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைனில் மட்டும் இதுவரை 5 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக ஐநா மதிப்பிட்டுள்ளது.
உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அந்நாடு மீது கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி போர் தொடுத்தது.
உக்ரைன் மீது பல பகுதிகளிலும் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிந்தன. உக்ரைனின் ராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷ்யா முதலில் கூறியது.

நீடிக்கும் போர்
ஆனால், இதற்கு மாறாக குடியிருப்பு கட்டிடங்களையும் ரஷ்ய படைகளின் குண்டுகள் பதம் பார்த்தன. உக்ரைனின் கெர்சன் நகரைத்தான் முதன் முதலாக கைப்பற்றிய ரஷ்ய ராணுவம் தொடர்ந்து பல இடங்களை அடுத்தடுத்து கைப்பற்றிவிடலாம் என்று எண்ணியது. ஆனால், உக்ரைனும் ரஷ்யாவுக்கு கடும் சவால் அளித்து வருகிறது. அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகளும் உக்ரைனுக்கு ஆயுதம் மற்றும் நிதி உதவிகள் அளித்து வருகின்றன. இதனால் ரஷ்யா எதிர்பார்த்ததைவிட உக்ரைன் அதிக பலம் கொண்டு சண்டையிட்டு வருகிறது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இந்த சண்டை நீடித்து வருகிறது.

பலர் அண்டை நாடுகளுக்கு ஓட்டம்
துவக்கத்தில் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த சில நகரங்களையும் உக்ரைன் தன்வசம் மீட்டுள்ளது. ஆறு மாதங்களை கடந்தும் ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் கொஞ்சம் கூட உக்கிரம் குறையாமல் நீடித்துக்கொண்டே செல்கிறது. ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் பொதுமக்கள் படும் துயரம் சொல்லி மாளாது. குடியிருப்பு கட்டிடங்கள் மீதான தாக்குதல் போன்றவற்றால் உயிருக்கு அஞ்சி உக்ரைன் மக்கள் பலர் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக ஓடியுள்ளனர். சில இடங்களில் பொதுமக்கள் மனித கேடயமாக பயன்படுத்தப்பட்டனர். பள்ளிகள் மீது கூட தாக்குதல் நடைபெற்றது. இதுபோரின் துயரத்தை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டுவது போல அமைந்தது.

5,514 பேர் பலி
இந்நிலையில் உக்ரைன் ரஷ்யா இடயேயான போரில் இதுவரை அப்பாவி பொதுமக்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற விவரத்தை ஐக்கிய நாடுகள் மதிப்பிட்டு வெளியிட்டுள்ளது. ரஷ்யா நடத்திய தாக்குதலில் இதுவரை 5,514 பேர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் 7,698 பேர் காயம் அடைந்து இருக்கலாம் என்று ஐநா மதிப்பிட்டுள்ளது. மேலும், போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனில் மூன்றில் ஒருவர் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறி இருக்கின்றனர் எனவும், உக்ரைனை விட்டு வெளியேறியதில் 50 சதவீதத்தினர் குழந்தைகள் என்றும் எஸ்டோனியா நாட்டுக்கு மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் அகதிகளாக அடைக்கலம் புகுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

67 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறினர்
மேலும், ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதல், ராக்கெட் தாக்குதல் ஆகியவை மூலமே பெரும்பாலான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 67 லட்சம் பேர் அகதிகளாக உக்ரைனில் இருந்து வெளியேறி உள்ளனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளில் ஏற்படும் அகதிகள் நெருக்கடியாக இது மாறக்கூடும் என்று ஐநா ஆணையர் எச்சரித்துள்ளார். இருந்தாலும் 1 கோடிக்கும் மேற்பட்டவர்கள் முதலில் உக்ரைனில் இருந்து அகதிகளாக சென்றனர். இவர்களில் சுமார் 40 லட்சம் பேர் மீண்டும் நாடு திரும்பிவிட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications