ரொம்ப நல்ல திருடனோ?.. லேப்டாப்பை திருடிவிட்டு உரிமையாளருக்கு உருக்கமாக மெயில் அனுப்பிய திருடன்!
வாஷிங்டன்: வீடு புகுந்து மடிக்கணினியை திருடிவிட்டு சென்ற திருடன், "ப்ரோ, எப்படி இருக்கீங்க? என் அவசர தேவைக்காக உங்கள் லேப்டாப்பை நான் திருடிவிட்டேன்" என்று வீட்டு உரிமையாளருக்கு மெயில் அனுப்பிய வினோத சம்பவம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
வீடு புகுந்து திருடிவிட்டு மன்னிப்பு கடிதம் எழுதி வைத்து விட்டு சென்றதாக செய்திகளில் வெளியானதை கேள்வி பட்டு இருக்கிறோம்.
இதேபோல், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் செல்போனை திருடிய திருடனுக்கு போன் செய்து செல்போனை பறிகொடுத்தவர் பேசும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் வேகமாக பரவின.
நல்ல திருடர்கள்
திருடர்களிலும் இரக்க குணம் கொண்ட நல்லவர்கள் இருக்கிறார்களோ என்று நம்மை சிந்திக்க வைக்கும் அளவுக்கு சில திருடர்களின் செயல்கள் அமைந்து விடுகிறது. இதை மெய்பிக்கும் வகையில்தான் இணையத்தில் தற்போது ஒரு செய்தி வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. சிரிப்பதா அழுவதா என்று சொல்வார்களே அதேபோல ஒரு சூழலை ஏற்படுத்தி விட்டு சென்ற திருடன் குறித்து ஸ்வேலி திக்சோ (Zweli Thixo) என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு நடந்த நிகழ்வு குறித்து பதிவிட்டு இருக்கிறார். அதன் விவரம் வருமாறு:-
ப்ரோ, எப்படி இருக்கீங்க?
ஸ்வேலி திக்சோ என்பவரின் லேப்டாப் இரவு நேரத்தில் திருடு போய் உள்ளது. இரவில் மர்ம நபர் திருடிச்சென்றுவிட்டதை நினைத்து அவர் கவலையில் மூழ்கி இருந்து இருக்கிறார். தனது தனிப்பட்ட தகவல்கள் உள்பட பல முக்கிய தகவல்கள் லேப்டாப்பில் இருந்ததால் வருத்தத்தில் இருந்தவருக்கு திடீரென ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. அதில், 'ப்ரோ, எப்படி இருக்கீங்க? உங்கள் லேப்டாப்பை நான் நேற்று திருடிவிட்டேன்.
லேப்டாப்பை விற்க கஸ்டமர் கிடைத்துவிட்டார்
எனது தேவைகளை பூர்த்தி செய்ய எனக்கு பணம் தேவைப்பட்டது. ஆராய்ச்சி பணிகளில் நீங்கள் மும்முரமாக ஈடுபட்டு இருப்பதை நான் பார்த்தேன். எனவே, அது தொடர்பான ஃபைல்களை இதில் இணைத்து அனுப்பியுள்ளேன். உங்களுக்கு தேவையான வேறு முக்கிய ஃபைல்கள் இருந்தாலும் திங்கள் கிழமை நண்பகலுக்குள் தெரியப்படுத்துங்கள்.. ஏனென்றால் லேப்டாப்பை விற்பதற்கு எனக்கு ஒரு கஸ்டமர் கிடைத்துவிட்டார்" என்று தெரிவித்து இருந்து இருக்கிறார்.
திருடிய நபருக்காக அனுதாபம் கொள்கிறேன்
இமெயில் வந்ததற்கான ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்துள்ள ஸ்வேலி_திக்சோ, எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்ற அர்த்தத்தில் குழப்பமான உணர்வுகளுடன் இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த பதிவுக்கு கீழே நெட்டிசன்கள் பலரும் திருடிய நபருக்காக நான் அனுதாபம் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளனர். மேலும் சில நெட்டிசன்கள், "இந்த திருடிய நபருக்கு வேலை வாங்கி கொடுக்கலாம்" என்று பதிவிட்டுள்ளார்.
அவருக்கு வேலை கொடுங்கள்
அதேபோல், மற்றுமொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், "முடிந்தவர்கள் இந்த நபருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கலாம். ஏனென்றால் லேப்டாப்பில் என்ன இருக்கிறது என்று பார்த்து ஆராய்ச்சி தகவல்களை பார்த்ததோடு மட்டும் இன்றி பாராட்டவும் செய்து இருக்கிறார். உண்மையாக எனக்கு வாய்ப்பு இருந்தால் இவரை கண்டிப்பாக வேலைக்கு எடுப்பேன்" என்று கூறியுள்ளார். திருடனை விமர்சித்தும் சிலர் பதிவிடாமல் இல்லை.