பயணி தவறவிட்ட செல்போன்.. ஜன்னல் வழியாக ஒப்படைத்த ஊழியர்கள்.."பஸ் இல்லீங்க விமானத்தில்" பரவும் வீடியோ
வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பயணி ஒருவர் தவற விட்ட செல்போனை, பஸ்சில் ஜன்னல் வழியாக கொடுப்பது போல விமானத்தில் ஜன்னல் வழியாக கொடுக்கும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
நமது ஊரில் பேருந்தில் செல்லும் போது வீட்டில் ஏதாவது பொருளை மறந்து விட்டு வந்தால் வீட்டில் உள்ளவர்கள் ஓடிவந்து கொண்டு வந்து கொடுப்பதை நாம் பல நேரங்களில் பார்த்து இருக்கிறோம்.
அதுவும் கிராமத்து மினி பஸ்களில் இத்தகைய சம்பவங்களை அடிக்கடி பார்க்க முடியும்.
Video: வாங்க வாஷிங்டன் வரை வாக்கிங் போய்ட்டு வரலாம்.. பயணங்கள் முடிவதில்லை!
கலிபோர்னியாவில் சம்பவம்
சினிமாக்களில் கூட இந்த காட்சிகள் பல இடங்களில் ரசிக்கும் படியாக அமைக்கப்பட்டு இருக்கும். ஏன் ரெயில்களில் கூட இப்படி சம்பவங்கள் சாதாரணமாக நடக்கும். ஆனால், விமானத்தில் இதுபோன்று ஜன்னல் வழியாக பயணி தவற விட்ட பொருளை மீண்டும் பயணியிடம் ஒப்படைக்கப்பட்ட காட்சியை பெரும்பாலும் பார்த்தே இருக்க மாட்டோம். ஆனால், அமெரிக்காவின் கலிபோர்னியா விமான நிலையத்தில் இப்படியான ஒருசம்பவம்தான் நடைபெற்று இருக்கிறது.
வேகமாக பரவும் வீடியோ
விமான பயணி ஒருவர் தவற விட்ட செல்போனை விமானியிடம் கொண்டு போய் விமான ஊழியர்கள் ஒப்படைக்கின்றனர். தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்த விமானி ஜன்னல் வழியாக மிகவும் சிரமப்பட்டு இந்த செல்போனை வாங்குகிறார். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோவை சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
விமானத்தின் உயரம் எட்டாததால்
சில நொடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவில் விமானம் டேக் ஆப் செய்ய ஓடுபாதையில் தயாராக நிற்கிறது. அப்போது விமானத்தின் காக்பிட் பகுதியில் விமானி இருக்கை அருகே இருக்கும் ஜன்னல் வழியாக விமானியிடம் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் செல்போனை கொடுக்க நினைக்கின்றனர். விமானத்தின் உயரம் எட்டாததால் விமானியும் கீழே நிற்கும் ஊழியரும் மிகவும் கஷ்டப்படுகின்றனர். ஒருவழியாக போராடி விமானியிடம் அந்த ஊழியர் ஒப்படைத்து விடுகிறார்.
செல்போனை தவறவிட்டுவிட்டார்
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாங் பீச் விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. இது குறித்து விமான நிறுவனம் கூறுகையில், விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், தனது செல்போனை விமானத்தின் கேட் பகுதியில் விட்டு விட்டு வந்துவிட்டார். இதை ஊழியர்கள் கவனிப்பதற்குள் போர்டிங் நடைமுறைகள் முடிந்து விமானம் கிளம்ப தயாராகிவிட்டது.
உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது
இதையடுத்து கேட் பகுதியில் பணியாற்றும் ஊழியர்கள் ஓடுதளத்தில் இருக்கும் ஊழியர்களிடம் செல்போனை ஒப்படைத்து பயணியிடம் கொண்டு சேர்க்க அறிவுறுத்தினர். இதன்படி, ஊழியர்கள் பைலட்டிடம் செல்போனை ஒப்படைத்தனர். தற்போது செல்போன் அதன் உரிமையாளரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டு விட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.