"ஜன்னல் ஓர இருக்கைக்காக" பெண் பயணிகளுக்கு இடையே கடும் சண்டை.. பஸ்-ல இல்லீங்க.. விமானத்தில்!
பிரேசில் நாட்டில் விமானத்தில் ஜன்னல் ஓர இருக்கைக்காக பெண் பயணிகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
வாஷிங்டன்: பிரேசில் நாட்டில் ஜன்னல் ஓர இருக்கைக்காக பெண் பயணிகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பெண் பயணிகள் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதனால், விமானம் டேக் ஆஃப் செய்வது நிறுத்தப்பட்டு இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
பேருந்துகளில் சீட் பிடிப்பதற்கும், துண்டு போட்டு சீட் பிடித்த இடத்தில் வேறு பயணி அமர்ந்து விட்டதாகவும் அடிக்கடி பயணிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுவதை பார்த்திருப்போம்.
சில நேரங்களில் கைகலப்பாகி காவல் நிலையங்கள் வரைக்கு கூட பஞ்சாயத்து போகும் அளவுக்கெல்லாம் கூட சண்டைகள் நடைபெற்று இருக்கிறது.
உச்சக்கட்ட குழப்பம்! பிரேசில் அதிபர் மாளிகையில் புகுந்து போல்சனாரோ ஆதரவாளர்கள் கலவரம்! நடப்பது என்ன
ஜன்னல் ஓர இருக்கைக்காக
ரயில்களில் கூட இப்படியான மோதலை கூட்ட நேரத்தில் சர்வ சதாரணமாக காண முடியும். இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை தான். ஆனால் விமானத்தில் ஜன்னல் ஓர இருக்கைக்காக சண்டை நடைபெற்றது இணையத்தில் அதிகம் பரவி வருகிறது. என்னது விமானத்தில் இருக்கைக்காக சண்டையா? என படிக்கும் போதே புருவத்தை உயர்த்தி பார்ப்பது புரிகிறது. பிரேசிலில் தான் இந்த வினோத நிகழ்வு நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு: -
பெண் பயணிகள் மோதல்
பிரேசிலின் சல்வேடார் நகரில் இருந்து சா பவுலோ நகரத்திற்கு GOL ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான G31659- என்ற விமானம் புறப்பட இருந்தது. இந்த விமானம் டேக் ஆப் ஆவதற்கு சில நிமிடங்களே எஞ்சியிருந்தது. அப்போது விமானத்தில் சில பெண் பயணிகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. 15 பெண் பயணிகள் தங்களுக்குள் கடுமையாக மோதிக்கொண்டனர். அவர்களை சண்டையில் இருந்து விலக்கி விடுவதற்கு விமான பணிப்பெண்களும் படாத பாடு பட்டனர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் அதிகம் பரவி வருகிறது.
இருவருக்கும் வாக்குவாதம்
இந்த சண்டை ஏன் நடந்தது என்பது குறித்து விமான பணிப்பெண் ஒருவர் கூறுகையில், "விமானத்தின் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து இருந்த ஒரு பெண் பயணியிடம் சக பெண் பயணி ஒருவர் தனது மாற்றுத்திறனாளி மகளுக்காக ஜன்னல் ஓர இருக்கையை விட்டு தருமாறு கேட்டு இருக்கிறார். ஆனால், ஜன்னல் ஓரத்தில் இருந்த அந்த பெண் பயணி இருக்கையை மாற்றிக் கொடுக்க சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால், இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
2 மணி நேரம் தாமதமாக
தொடர்ந்து வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இரு பெண்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களும் சண்டையிட தொடங்கினர். இதனால், நாங்கள் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டது" என்றார். விமானத்தில் ஜன்னல் ஓர இருக்கைக்காக தொடங்கிய இந்த சண்டையால் விமானம் சுமார் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுள்ளது. இதனால், பிற பயணிகளும் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை
இந்த சம்பவம் குறித்து விமான நிறுவனம் கூறுகையில், "வியாழக்கிழமை இந்த மோதல் சம்பவம் நடைபெற்றது. சண்டையிட்ட அனைத்து பயணிகளும் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டனர். அவர்கள் தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. விமானத்தில் நடைபெற்ற மோதல் சம்பவத்திற்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். பயணிகளின் பாதுகாப்பு கருதியே நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளது.
இதேபோன்று ஒரு சம்பவம்
கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திலும் இதேபோன்ற விமானத்தின் சீட் விவகாரத்தில் பயணிகளுக்கு இடையே சண்டை நடைபெற்றது. விமானத்தின் இருக்கையை சாய்க்கும் போது இரு பயணிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. விமானம் சென்று கொண்டிருந்த போது இந்த சண்டை நடைபெற்றதால் விமானம் தரையிறங்கியதும் இரு பயணிகளும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தனர்.