வானில் நடக்கும் பேரதிசயம்..50 ஆயிரம் ஆண்டு கழித்து பூமி பக்கம் வரும் அரிய பச்சை நிற வால் நட்சத்திரம்
வாஷிங்டன்: 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு அரிய வால் நட்சத்திரம் ஒன்று பூமியை நெருங்கி வர இருக்கிறது. அரிய பச்சை நிற இந்த வால் நட்சத்திரத்தை வெறும் கண்களாலே இரவு நேரங்களில் பார்க்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பிப்ரவரி 1 முதல் 2 ஆம் தேதிக்குள் இந்த அரிய வானியல் நிகழ்வு நடைபெறலாம் என எதிர்பார்ப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பிரபஞ்சம் எண்ணிலடங்காத சூரியக் குடும்பங்களையும், நட்சத்திரக் கூட்டங்களையும் உள்ளடக்கியது.
ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் எண்ணற்ற கோள்கள் உள்ளன. பல்வேறு பேரதிசயங்களை கொண்டஇந்த பிரபஞ்சம் தொடர்பான ஆய்வுகளில் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.
50,000 ஆண்டு அதிசயம்.. பிப்.,1ல் பூமி வரும் வால்நட்சத்திரம்.. வெறும் கண்களாலே பார்க்கலாம்.. அபூர்வம்
பச்சை நிற வால் நட்சத்திரம்
இந்த பூமி தோன்றியது என்பது முதல் பூமியை போல மனிதர்கள் வசிப்பதற்கு உகந்த வேறு கிரகங்கள் உள்ளனவா? என்பது வரை ஆய்வுகள் பல ஆண்டுகளாக நீடித்து வருகின்றன. அதேபோல், பூமிக்கு மிக நெருக்கமாக வரும் கோள்கள் மற்றும் பூமிக்கு ஆபத்தாக வரும் விண்கற்கள் குறித்தும் விஞ்ஞானிகள் தொடர்ச்சியான ஆய்வுகளை செய்து அவ்வப்போது அது தொடர்பான விவரங்களை அளிப்பது வழக்கம். அந்த வகையில், தற்போது 50 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் அரிதான ஒன்றாக பச்சை நிற வால் நட்சத்திரம் ஒன்று பூமிக்கு அருகில் வர உள்ளது.
பூமிக்கு அருகில் வர இருப்பதாக
இந்த அரிதான பச்சை நிற வால் நட்சத்திரத்திற்கு சி/2022 இ3 (இசட்டிஎம்) என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா பெயரிட்டது. இந்த வால் நட்சத்திரம் பூமிக்கு அருகில் வர இருப்பதாக கடந்த ஆண்டு மார்ச் மாதமே நாசா விஞ்ஞானிகள் கூறியிருந்தனர். அப்போதில் இருந்து இந்த வால் நட்சத்திரத்தை ஆய்வாளர்கள் தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர்.
வெறும் கண்காளால் பார்க்கலாம்?
அந்த வகையில், இந்த வால் நட்சத்திரம் அடுத்த மாதம் 2 ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் வந்து கடந்து செல்லும் என்று நாசா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 50 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வரும் இந்த அரிய வால் நட்சத்திரத்தை பகல் நேரங்களில் பைனாகுலர் மூலமாக பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியில் இருந்து 26 மில்லியன் மைல் தொலைவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த பச்சை நிற வால்நட்சத்திரத்தை இரவு நேரங்களில் வெறும் கண்காளால் கூட பார்க்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக
எனினும், இது வரும் நாட்களில் எவ்வளவு பிரகாசமாக உள்ளது என்பதை சார்ந்தே வெறும் கண்களால் பார்க்க முடியுமா என்பது தெரியவரும் எனவும் விஞ்ஞானிகள் கூறும் தகவலாக உள்ளது. இந்த பச்சை நிற வால் நட்சத்திரம் இதற்கு முன்பாக சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக பூமியை நெருங்கி வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதாவது கற்கால மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் இந்த வால் நட்சத்திரம் பூமியை நெருங்கி வந்தது. அதன்பிறகு தற்போதுதான் நெருங்கி வர இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த பச்சை நிற வால் நட்சத்திரம் சூரிய குடும்பத்தின் வெளிப்புறம் வழியக ஒரு சுற்று வட்டப்பாதையை கொண்டு சூரியனை சுற்றி வருகிறதாம். இதன் காரணமாகவே இதன் பயணம் நீண்ட நெடியதாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.