"H-1B விசா.." வேலைக்கே ஆப்பு வைக்க பார்த்த டிரம்ப்! அமெரிக்க உச்ச நீதிமன்றம் தரமான தீர்ப்பு! சூப்பர்
வாஷிங்டன்: அதிபர் டிரம்ப் அமெரிக்காவில் வெளிநாட்டினருக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அங்கு H-1B விசா வைத்திருப்போரின் மனைவிகளுக்கு H-4 விசா தரப்படும் நிலையில், அது தொடர்பாக வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அமெரிக்காவில் டிரம்ப் வந்த பிறகு நிலைமை எல்லாமே மாறிவிட்டது. அங்கு வெளிநாட்டினருக்கு எதிராகவே டிரம்ப் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதலில் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த டிரம்ப் நிர்வாகம், இப்போது சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் இருப்போருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

டிரம்ப்
குறிப்பாக ஹெச்-1பி விசாக்களுக்கு டிரம்ப் சமீபத்தில் பல கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தார். ஹெச்-1பி விசா கட்டணத்தைக் கூட பல மடங்கு உயர்த்தினார். இதனால் வெளிநாட்டினர், குறிப்பாக இந்திய ஐடி ஊழியர்கள், கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். டிரம்பின் கட்டுப்பாடுகளால் இந்தியர்கள் நேரடியாகப் பாதிக்க ஆரம்பித்துள்ளனர். இந்தச் சூழலில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஹெச்-1பி விசா குடும்பங்களுக்கு ஒரு நல்ல செய்தியைக் கொடுத்துள்ளது
அதாவது அமெரிக்காவில் H-1B விசா வைத்திருப்போரின் குடும்பத்தினருக்கு ஹெச்-4பி விசா வழங்கப்படுகிறது. அவர்களும் அமெரிக்காவில் வேலை செய்யலாம். இந்த பணிபுரிய அனுமதிக்கும் விதிகளுக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. "சேவ் ஜாப்ஸ் அமெரிக்கா" என்ற அமைப்பு, இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தது.
ஹெச்-4பி விசா
அமெரிக்காவில் வசிக்கும் இந்த வெளிநாட்டு மக்கள் (ஹெச்-4பி விசா வைத்திருப்போர்), அமெரிக்க மக்களுடன் போட்டியிடுவதாகவும் இது பெடரல் குடியேற்றச் சட்டத்திற்கு எதிரானது என அவர்கள் வாதிட்டனர். "சேவ் ஜாப்ஸ் USA" தாக்கல் செய்த மனுவில், "H-1B விசா வைத்திருப்போரின் பார்ட்னர்கள் பணிபுரியக் குடியேற்ற துறை அனுமதித்துள்ளது. இது சட்டத்தில் குறிப்பிடப்படாத ஒரு வழிமுறை என்று கூறியுள்ளது. வெளிநாட்டு ஊழியர்களால் அமெரிக்க ஐடி துறையினர் வேலை இழப்பதாக இந்த அமைப்பு தெரிவித்தது.
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்
இருப்பினும், இந்த மனுவை அமெரிக்க சுப்ரீம் கோர்ட் முழுமையாகக் கூட விசாரிக்கவில்லை. இந்த மனுவை நிராகரிப்பதாக அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. கடந்தாண்டே அமெரிக்க கீழமை நீதிமன்றம் ஹெச்-4 விசா வைத்திருப்போர் வேலை செய்யலாம் எனக் கூறியிருந்த நிலையில், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இப்போது அந்த மனுவையும் அமெரிக்க சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
நிம்மதி
இது பல ஆயிரம் H-4 விசா ஹோல்டர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இதன் மூலம் H-4 விசா வைத்திருப்போர் எந்தவொரு பயமும் இல்லாமல் வேலை செய்யலாம்.. தங்கள் வேலை உரிமைகளை இழக்க நேரிடும் என்ற கவலையின்றி அவர்கள் வாழவும், பணிபுரியவும் முடியும். H-4 விசா வைத்திருப்போரை பணிபுரிய அனுமதிப்பது பலரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. குறிப்பாக, திறமையானவர்களாக இருந்தும் வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
பணிபுரியும் அனுமதியால் ஹெச்-1பி விசா குடும்பத்தினர் பலர் பெரிய நிறுவனங்களில் இணைந்துள்ளனர்.. சொந்தமாக பிஸ்னஸ் ஆரம்பித்து அமெரிக்கப் பொருளாதாரத்திற்குப் பங்களித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் அமெரிக்க உச்ச நீதிமன்றம் இனிப்பான செய்தியைக் கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்!












Click it and Unblock the Notifications