ஹார்வார்டில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கு தடை.. டிரம்பின் உத்தரவை எதிர்த்து பல்கலை மேல்முறையீடு
வாஷிங்டன்: ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு டிரம்ப் அரசு ஏற்கெனவே தடை விதித்திருந்தது. ஆனால், அமெரிக்க நீதிமன்றம் இந்த உத்தரவுக்கு தடை போட்டிருந்தது. இதனையடுத்து டிரம்ப் மற்றொரு உத்தரவை பிறப்பித்தார். அதாவது புதியதாக எந்த வெளிநாட்டு மாணவர்களும் ஹார்வர்டில் சேரக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து தற்போது பல்கலைக்கழகம் சார்பில் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டிருக்கிறது.
பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டங்களை நடத்தக்கூடாது, பாட திட்டங்களை இஸ்ரேலுக்கு ஆதரவாக மாற்ற வேண்டும் என்று அமெரிக்க அரசு கோரியிருந்தது. ஆனால் இதற்கு ஹார்வர்ட் பல்கலை செவி சாய்க்கவில்லை. இதனையடுத்து பல்கலைக்கு பல்வேறு வகையில் டிரம்ப் நிர்வாகம் அழுத்தம் கொடுத்து வந்தது.

குறிப்பாக பல்கலைக்கு இதற்கு முன்னர் ஒதுக்கப்பட்டு வந்த நிதிகள் வெட்டப்பட்டன. மட்டுமல்லாது பல்கலை சொத்துக்களுக்கு வருமான வரியும் விதிக்கப்பட்டது. இதற்கெல்லாம் உச்சமாகத்தான், ஹார்வார்டில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் வேறு கல்வி நிலையங்களுக்கு மாற்றப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தை பல்கலைக்கழகம் நாடியிருந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், டிரம்ப்பின் உத்தரவுக்கு அதிரடியாக தடை விதித்திருந்தது.
சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளித்தாலும், சொந்த நாட்டு மாணவர்கள் இஸ்ரேலுக்கு எதிராக போராடியதும், அதற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை விதித்ததும் டிரம்ப்பை கடுப்பாக்கியுள்ளது. எனவே, நேற்று முன்தினம் டிரம்ப் மற்றொரு உத்தரவை பிறப்பித்திருந்தார். அதாவது இனி வரும் காலத்தில் வெளிநாட்டை சேர்ந்த மாணவர்கள் ஹார்வர்டில் படிக்க கூடாது. இதற்கான மாணவர் சேர்க்கையை நடத்த கூடாது என்று உத்தரவு போட்டிருந்தார்.
அமெரிக்காவின் பழமையான பல்கலைக்கழகமான ஹார்வர்ட், உலகம் முழுவதிலுமிருந்து சிறந்த மாணவர்களை ஈர்த்து வருகிறது. மொத்த மாணவர்களில் கால் பங்கிற்கும் அதிகமானோர் வெளிநாட்டினராக உள்ளனர். இப்படி இருக்கையில் டிரம்ப்பின் உத்தரவு பல்கலைக்கழகத்தின் சூழலை பாதித்திருக்கிறது. எனவே பல்கலை நிர்வாகம் இந்த உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
பல்கலை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுவில், "வெள்ளை மாளிகையின் கோரிக்கையை நிராகரித்ததற்காக, பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. முந்தைய நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில், அதிபர் செயல்படுகிறது. எனவே டிரம்பின் இந்த உத்தரவுக்கும் தடை விதிக்க வேண்டும்" என்று ஹார்வர்ட் கேட்டுக்கொண்டிருக்கிறது.
மறுபுறம் மாணவர்களுக்கான விசா கட்டுப்பாடுகளையும் அமெரிக்கா டைட் செய்திருக்கிறது. குறிப்பாக சீன மாணவர்களுக்கான விசாக்கள் ரத்து செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது. முன்பெல்லாம், அமெரிக்காவுக்கு படிக்க செல்லும் மாணவர்களின் கல்வி திறன் மட்டுமே சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மாணவர்களின் சோஷியல் மீடியா ஆக்டிவிட்டிகளை, அமெரிக்க அரசு ஆய்வு செய்கிறது. அதில் போராட்டம், அமெரிக்காவுக்கு எதிரான கருத்துக்கள் இடம் பெற்றிருந்தால் அவர்களுக்கான விசா மறுக்கப்படுகிறது.
இந்த கட்டுபாடுகளால் தற்போது சர்வசே மாணவர்கள், அமெரிக்காவை தவிர்த்துவிட்டு வேறு நாடுகள் பக்கம் திரும்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications