‛‛ரகசியம்’’.. ஐநா பொதுச்சபையில் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்து கைவிட்ட இந்தியா.. ஒரே பரபரப்பு
வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்நிலையில் உக்ரைனின் 4 பிராந்தியங்களை ரஷ்யா சட்டவிரோதமாக இணைத்ததை கண்டிக்கும் வரைவு தீர்மானத்தின் மீது ஐநா பொதுச்சபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தகோரிய ரஷ்யாவின் கோரிக்கையை நிராகரிக்க இந்தியா வாக்களித்துள்ளது. மேலும் 100 நாடுகளுடன் இணைந்து பொது வாக்கெடுப்பை இந்தியா கோரியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இருநாடுகள் இடையே எல்லை பிரச்சனை இருந்த நிலையில் உக்ரைன் அமெரிக்காவின் நாட்டோ படையில் சேர முயன்றது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா கடந்த பிப்ரவரி 24ல் உக்ரைன் மீது போர் நடவடிக்கையை துவங்கியது. இந்த போர் நடவடிக்கை 8 மாதமாக தொடர்ந்து வருகிறது.
தாக்குதலை திடீரென தீவிரப்படுத்திய ரஷ்யா.. சீறி பாய்ந்த 75 ஏவுகணைகள்.. நிலைகுலைந்த உக்ரைன்.. பலர் பலி
தொடரும் போர்
போரால் உக்ரைன் நாட்டு மக்கள் பிற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் உக்ரைனில் உள்ள பொதுமக்களில் ஏராளமானவர்கள் ரஷ்யாவின் தாக்குதலில் இறந்துள்ளனர். இருப்பினும் உக்ரைனும் தொடர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டு வருகிறது. தற்போது உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் நடவடிக்கை என்பது தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. ரஷ்யா அணுஆயுதம் மூலம் மிரட்டல் விடுத்து வருகிறது.
உக்ரைன் 4 பகுதிகள் இணைப்பு
இந்நிலையில் தான் போர் நடவடிக்கையின் காரணமாக உக்ரைனின் சில பகுதிகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்கும் பணிகளை ரஷ்யா துவங்கி செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தான் சமீபத்தில் உக்ரைனின் டொனெட்ஸ்க், கெர்சன், லுஹான்ஸ்க், ஜபோரிஜியா பகுதிகளை ரஷ்யா சமீபத்தில் தன்னுடன் இணைத்து கொண்டது.
உதவி கோரிய உக்ரைன்
இதற்கு உக்ரைன் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் ரஷ்யா போர் ஒப்பந்தத்தை தொடர்ந்து மீறுவதோடு, உக்ரைனின் அதிகாரப்பூர்வ பகுதிகளை ரஷ்யா தன்னுடன் இணைத்து கொள்கிறது. இதனால் உலக நாடுகள் உக்ரைன் பக்கம் நிற்க வேண்டும் என அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறினார்.
ஐநா பொதுச்சபை கூட்டம்
இந்நிலையில் தான் 193 நாடுகளை உறுப்பினர்களாக உள்ள ஐநா பொதுச்சபையில் நேற்று அல்பேனியாவின் வரைவு தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வரைவு தீர்மானம் என்பது உக்ரைனின் பகுதிகளை ரஷ்யா இணைத்து கொண்டதை எதிர்க்கும் வகையில் உள்ளது. இதையடுத்து ரஷ்யா தரப்பில், இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பை ரகசியமாக தான் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தது.
ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா
ரஷ்யாவின் ரகசிய வாக்கெடுப்புக்கு ஆதரவாக 13 நாடுகள் மட்டுமே வாக்களித்தன, 39 நாடுகள் வாக்களிக்கவில்லை. ரஷ்யாவும் சீனாவும் வாக்களிக்காத நிலையில் ஐநாவின் உறுப்பு நாடுகளாக உள்ள 107 நாடுகள் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. அதோடு அல்பேனியா கொண்டு வந்த வரைவு தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை பொதுவாக நடத்த வேண்டும் எனக்கூறி ரஷ்யாவுக்கு எதிராக 107 நாடுகள் வாக்களித்தனர். இதில் இந்தியாவும் ஒரு நாடாகும். இதன்மூலம் ஐநா பொதுச்சபையில் இந்தியா ரஷ்யாவுக்கு எதிராக திரும்பி உள்ளது.
மேல்முறையீட்டிலும் எதிர்ப்பு
இதையடுத்து வரைவு தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் ஐநா பொதுச்சபையில் தலைவரின் தீர்ப்பை எதிர்த்து ரஷ்யா மேல்முறையீடு செய்தது. இதில் ரஷ்யாவுக்கு ஆதரவாக 16 நாடுகள் வாக்களித்த நிலையில் 34 நாடுகள் வாக்களிக்கவில்லை. இதிலும் ரஷ்யாவுக்கு எதிராக 100 நாடுகள் ஓட்டளித்தன. இதிலும் இந்தியாவும் ஒன்றாகும். மேல்முறையீட்டு முயற்சியும் கைக்கொடுக்காததால் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்வது கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மாறும் இந்தியா நிலைப்பாடு
உக்ரைன் போரை பொறுத்தமட்டில் இந்தியா நடுநிலை வகித்து வருகிறது. அதோடு போர் நடவடிக்கையை கைவிட்டு உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மேலும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை இந்தியா விதிக்கவில்லை. அதோடு தொடர்ந்து ரஷ்யாவுடன் வர்த்தக ரீதியாக இந்தியா தொடர்பில் உள்ளது. அதோடு ஐநா சபையில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானங்கள் மீதான ஓட்டெடுப்பை இந்தியா தொடர்ந்து புறக்கணித்து வந்த நிலையில் தான் சமீபத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்பது சில இடங்களில் மாறியுள்ளது.
முன்பு நடந்தது என்ன?
சமீபத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் முதல் முறையாக ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. அதாவது உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் காணொலி வாயிலாக உரையாற்ற அழைப்பு விடுக்கும் விஷயத்துக்கு வாக்கெடுப்பு நடந்தது. இதில் இந்தியா ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்த நிலையில் தான் தற்போது ஐநா பொதுச்சபையில் இந்தியா ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்தது என்பது குறிப்பிடத்தக்கது.