இந்திய இளைஞரை "பாலியல்" அடிமையாக பயன்படுத்திய பெண் அதிகாரி? நீதிமன்றத்தில் வைத்த முக்கியமான பாயிண்டு
வாஷிங்டன்: ஜேபி மோர்கன் சேஸ் உயர் அதிகாரி லோர்னா ஹஜ்தினி என்பவர் மீது இந்தியாவைச் சேர்ந்த ஜூனியர் ஊழியர் ஒருவர் பாலியல் பலாத்கார இனவெறி புகார்கள் அளித்துள்ளது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே தன் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் லோர்னா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்ற சர்வதேச நிதி நிறுவனங்களில் ஒன்று ஜேபி மோர்கன் சேஸ் (JPMorgan Chase).. பொருளாதார வளர்ச்சி, கிரெடிட் ரேட்டிங் தொடர்பாக இவர்கள் கொடுக்கும் கணிப்புகள் சர்வதேச அளவில் உற்றுக் கவனிக்கப்படும். இதற்கிடையே இந்நிறுவனத்தில் பணியாற்றும் உயர் அதிகாரி லோர்னா ஹஜ்தினி என்பவர் மீது பாலியல் பலாத்கார புகார் எழுந்துள்ளது.

பாலியல் அடிமை
இந்தியாவைச் சேர்ந்த ஜூனியர் ஒருவர் அவர் மீது பாலியல் புகாரை முன்வைத்துள்ளார். தன்னை பாலியல் அடிமை போலப் பயன்படுத்தியதாகவும் பல முறை அத்துமீறி நடந்து கொண்டதாகவும் குற்றஞ்சாட்டி வழக்கு தொடர்ந்துள்ளார். இருப்பினும், தன் மீதான புகார்களை லோர்னா திட்டவட்டமாக மறுத்துள்ளார். எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் தன் மீது புகார்கள் முன்வைக்கப்படுவதாக அவர் சாடியுள்ளார். நியூயார்க் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், லோர்னா தரப்பு முன்வைத்துள்ள வாதங்கள் இந்த வழக்கின் போக்கையே மாற்றியுள்ளன.
முக்கிய வாதம்
லோர்னாவின் வழக்கறிஞர்கள் தி நியூயார்க் போஸ்ட் இதழுக்கு அளித்துள்ள விளக்கத்தில் சில முக்கியமான புள்ளிகளைக் குறிப்பிட்டுள்ளனர்.. பாலியல் அத்துமீறல், போதைப்பொருள் கொடுத்தல் போன்ற அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் லோர்னா மறுத்துள்ளார். மேலும், புகாரில் கூறப்பட்டுள்ள சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் இடத்திற்கு லோர்னா தனது வாழ்நாளில் ஒருமுறை கூட சென்றதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரளித்த நபர் தனக்குக் கீழ் பணியாற்றவில்லை என்றும், அதனால் அவரது போனஸ் தொகையைத் தீர்மானிக்கும் அதிகாரம் தமக்குக் கிடையாது என்றும் லோர்னா சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து ஜேபி மோர்கன் வங்கி ஏற்கனவே ஒரு விரிவான உள் விசாரணையை நடத்தியுள்ளது. அந்த விசாரணையின் முடிவுகள் லோர்னாவுக்குச் சாதகமாக அமைந்துள்ளன.. உள் விசாரணைக் குழு ஊழியர்களின் தொலைப்பேசி அழைப்பு விவரங்கள் மற்றும் மின்னஞ்சல்களை ஆய்வு செய்ததில், லோர்னாவுக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என வங்கித் தரப்பு கூறியுள்ளது.
வங்கி நடத்திய விசாரணை
மேலும், வங்கி நடத்தி உள்விசாரணையில் பல்வேறு தரப்பும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். தங்களின் வாக்குமூலத்தையும் கொடுத்துள்ளனர். இருப்பினும், புகார்தாரர் மட்டும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லையாம். மே 2025ல் இந்தப் புகார் அளித்த அந்த நபர், நிறுவனத்தை விட்டு வெளியேறப் பல மில்லியன் பவுண்டுகள் நஷ்ட ஈடு கேட்டுப் பேரம் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புகார் அளித்த நபரின் உண்மையான பெயர் வெளியிடப்படவில்லை. 'ஜான் டோ' என்ற புனைபெயரிலேயே வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த நபர் ஜேபி மோர்கன் நிறுவனத்தில் சேருவதற்கு முன்பே மோர்கன் ஸ்டான்லி, கிரெடிட் சூயிஸ் போன்ற முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியவர். தற்போது அவர் 'பிரேகல் சேஜ்மவுண்ட்' என்ற முதலீட்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரது புகார் குறித்து விசாரிக்கும் போது, சக ஊழியர்கள் அவரை, வேலையில் சிறந்து விளங்கினாலும் எப்போதும் தனித்தே இருப்பவர்" எனக் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவேறு தகவல்கள்
ஒருபுறம் லோர்னா ஹஜ்தினி ஒரு மிகச் சிறந்த ஊழியர் என்றும், சமூக சேவைகளில் ஈடுபாடு கொண்டவர் என்றும் வங்கி ஊழியர்கள் கூறுகின்றனர். மறுபுறம், பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இளைஞர் வங்கியின் மீது பழிவாங்கும் நடவடிக்கை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார். இருப்பினும், இருவரும் ஒரே பிரிவில் வேலை செய்யவில்லை என்பதால் இந்த புகாரில் உண்மை இல்லை என்கிறது வங்கி தரப்பு! விசாரணை தொடரும் சூழலில், இதில் பல பகீர் தகவல்கள் வெளியாகும் என்றே தெரிகிறது.














Click it and Unblock the Notifications