இனவாதத்தை ஒழிக்க எந்த தடுப்பூசியும் கிடையாது.. அமெரிக்காவின் முக்கிய பிரச்சினையை கையிலெடுத்த கமலா
வாஷிங்டன்: இனவாதத்திற்கு எதிராக எந்த ஒரு தடுப்பூசியும் இல்லை என அமெரிக்காவின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரீஸ் தெரிவித்தார். இவற்றை நாம் நினைத்தால் மட்டுமே ஒழிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதே வேளையில் இதுவரை அமெரிக்காவில் இனவாதத்தால் கொல்லப்பட்ட கருப்பினத்தவர்களின் பெயர்களையும் பட்டியலிட்டார். செனட்டரான கமலா ஹாரீஸுக்கு அமெரிக்க தேர்தலில் போட்டியிட தரமான வாய்ப்பு கிடைத்துள்ளது.
அவர் ஜனநாயக கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த வாய்ப்பை ஏற்ற அவர் ஏற்புரை நிகழ்த்தினார்.
ட்ரம்ப் ஒரு தோல்வியின் அடையாளம்: கமலா ஹாரிசின் அதிரடி பிரசாரம் ஆரம்பம்
சமநீதி
அப்போது அவர் கூறுகையில் இனபாகுபாடின்றி அனைவருக்கும் சம நீதி கிடைக்கும் என ஜனநாயக கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்ற பாடுபடும். இனவாதத்திற்கு என எந்த ஒரு தடுப்பூசியும் இல்லை. நாம்தான் அதற்கு எதிராக போராடி ஒழிக்க வேண்டும். ஜார்ஜ் பிளாய்டு, பிரியோன்னா டெய்லர் உள்ளிட்டோருக்காகவும் இன்னும் ஏராளமானோரின் வாழ்க்கைக்காகவும் நம் குழந்தைகளுக்காகவும் நமக்காகவும் இனவாதத்தை ஒழிக்க வேண்டும்.
பெண் தலைவர்கள்
அனைவருக்கும் சுதந்திரம் கிடைக்கும் வரை யாருக்கும் சுதந்திரம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மேரி சர்ச் டெரீல், மேரி மெக்லியாடு பெத்துனே, ஃபனி லோ ஹேமர், டயானே நாஷ், பேக்கர் மோட்லி, ஷிர்லி சிஸ்ஹோல்ம் ஆகிய பல பெண் அரசியல்வாதிகள் தங்கள் உரிமைகளுக்காக போராடியுள்ளனர்.
அங்கீகாரம்
மேற்கண்ட பெண்கள் எந்த வித ஆரவாரமோ அங்கீகாரமோ இல்லாமல் வெறும் ஓட்டுக்காக மட்டுமே அவர்கள் போராடவில்லை. முடிவெடுக்கும் அதிகாரத்திற்கு வர வேண்டும் என பாடுபட்டார்கள். ஜனநாயகத்தையும் வாய்ப்புகளையும் உண்மையானதாக மாற்ற இந்த பெண்களும் அவரை பின்தொடர்ந்த தலைமுறையினரும் உழைத்தனர். அவர்கள் ஒபாமா, ஹிலாரி உள்ளிட்டோர் தலைமை ஏற்க வழிவகுத்தனர் என்றார் கமலா.
சாதனைகள்
இனவாதம் குறித்து முழங்கிய கமலா திடீரென தனது தாயை நினைத்து உருக்கமாக பேசினார். அமெரிக்காவின் முக்கிய கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் மற்றும் தெற்காசிய பெண்ணாக தேர்வு செய்யப்பட்ட தனது மகளின் (கமலா) சாதனைகளை பார்க்க அவர் இப்போது இங்கில்லை.
பிறப்பிற்கு அர்த்தம்
அடுத்தவர்களுக்கு சேவை செய்வதே நமது பிறப்பிற்கு அர்த்தம் கொடுக்கும் என்பதை எனக்கு என் தாய் கற்றுக் கொடுத்தார். இன்று இரவு அவர் என் முன் தோன்றினால் எப்படி இருக்கும்? அவர் மேலிருந்து அனைத்தையும் பார்ப்பார் என்பது எனக்கு தெரியும். 25 வயதில் ஓக்லாந்தில் உள்ள கெய்சர் மருத்துவமனையில் என்னை பெற்றெடுத்த எனது தாய் அன்றைய தினம் நான் துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு உங்கள் முன்னர் நின்று உரையாற்றுவேன் என கற்பனை கூட செய்திருக்க மாட்டார் என கண் கலங்கினார் கமலா. இவரது தாய் ஷியாமளா கோபாலன் 2009-ஆம் ஆண்டு புற்றுநோயால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.