அகிம்சை போதித்தவருக்கு இப்படியொரு அவமானமா..இந்தியா அன்பளிப்பாக அளித்த காந்திசிலை அமெரிக்காவில் சேதம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அகிம்சை போதித்த காந்தியடிகளின் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகிற்கே அகிம்சை என்ற உயர்ந்த கொள்கையைப் போதித்தவர் காந்தியடிகள். நாட்டிலுள்ள பலரும் வன்முறை மூலம் விடுதலைக்குப் போராடிக் கொண்டிருந்த போது, கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் புரிந்து நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தந்தவர் காந்தி.
இவரது அகிம்சை கொள்கை தற்போது வரையிலும்கூட பல்வேறு நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது. மேலும் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற பல்வேறு நாடுகளிலும்கூட காந்தியருக்குச் சிலை வைக்கப்பட்டுள்ளது.
காந்தி சிலை சேதம்
அதன்படி அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் வெண்கலச் சிலையை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காந்தி சிலையின் கால் பகுதியும் தலை பகுதியும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதையடுத்து அவரது சிலை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
சேதப்படுத்தியது யார்?
கடந்த ஜனவரி 27ஆம் தேதி அதிகாலை காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். காந்தி சிலையைச் சேதப்படுத்தியது யார் என்பது குறித்தும் எதற்காகச் சிலையைச் சேதப்படுத்தினர் என்பது குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இருப்பினும், இங்குள்ள இந்தியா எதிர்ப்பு அமைப்புகளோ அல்லது காலிஸ்தான் ஆதரவாளர்களோ காந்தி சிலையைச் சேதப்படுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் அன்பளிப்பு
ஆறு அடி உயரம், 294 கிலோ எடையுள்ள இந்த காந்தியின் முழு வெண்கலச் சிலையை அமெரிக்காவுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்தியா அன்பளிப்பாக வழங்கியது. ஆனால், அப்போதே காந்தி சிலையை நிறுவக் கூடாது என்று இப்பகுதியுள்ள இந்தியாவில் சிறுபான்மையினருக்கான அமைப்பு போராட்டம் நடத்தினர். இருப்பினும், டேவிஸ் நகராட்சி அளித்த ஒப்புதலைத் தொடர்ந்து காந்தி சிலை நிறுவப்பட்டது. அப்போது முதலே காந்தி சிலையை அகற்ற வேண்டும் என்று இந்தியாவில் சிறுபான்மையினருக்கான அமைப்பு போராட்டம் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காலிஸ்தான் ஆதரவாளர்கள் வரவேற்பு
காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது கலிபோர்னியா வாழ் இந்தியர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும், காலிஸ்தான் ஆதரவாளர்கள் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதை வரவேற்று ட்வீட் செய்துள்ளனர். சேதப்படுத்தப்பட்ட காந்தியின் சிலையை ட்விட்டரில் பதிவிட்டுள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள், இன்று நல்ல நாள் என்றும் ட்வீட் செய்துள்ளனர்.
முதல்முறை இல்லை
மகாத்மா காந்தியின் சிலை அமெரிக்காவில் சேதப்படுத்தப்படுவது இது முதல் முறை இல்லை. ஏற்கனவே, காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடந்தாண்டு டிசம்பர் மாதம் தலைநகர் வாஷிங்டனிலுள்ள இந்திய தூதரகத்தின் முன் வைக்கப்பட்டிருந்த காந்தி சிலையைச் சேதப்படுத்தினர். காலிஸ்தான் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தாலும், அமெரிக்காவில் அவை தடை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.